world

புதிய சோசலிச முன்னணி - நேபாளத்தில் தொடக்கம்

காத்மண்டு, ஜூன் 22- நேபாளத்தில் நான்கு இடதுசாரிக் கட்சிகள் இணைந்து நேபாள சோசலிச முன்னணி என்ற புதிய அமைப்பைத் தொடங்கியுள்ளன. நேபாள காங்கிரஸ் ஆதரவுடன் மாவோயிஸ்டு மையம் உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் தற்போது ஆட்சிப் பொறுப்பில் உள்ளன. ஐந்து இடதுசாரிக்கட்சிகளும் இணைந்து பணியாற்றும் வகையில் சோசலிச முன்னணி என்ற பெயரில் புதிய அமைப்பை உருவாக்க முடிவெடுத்தனர். இதனடிப்படையில் பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. ஜூன் 21 ஆம் தேதியன்று தலைநகர் காத்மண்டுவில் நடைபெற்ற நிகழ்வில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நான்கு கட்சிகள் கையெழுத்திட்டன. நேபாள கம்யூனிஸ்ட் கட்சி(மாவோயிஸ்டு மையம்), நேபாள கம்யூனிஸ்ட் (ஐக்கிய சோசலிச) கட்சி, ஜனதா சமாஜ்வாதிக் கட்சி மற்றும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. பேச்சுவார்த்தையில் பங்கேற்ற பாபுராம் பட்டாராய் தலைமையிலான நேபாள சமாஜ்வாதிக் கட்சி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. புதிதாக உருவாக்கப்பட்ட நேபாள சோசலிச முன்னணிக்கு நாடாளுமன்றத்தில் 54 உறுப்பினர்கள் உள்ளனர். முதலில் இரண்டு மட்டத்திலான அமைப்பை உருவாக்குவது என்றும், பின்னர் ஒரே அமைப்பாக இணைவது என்றும் முடிவெடுத்திருக்கிறார்கள். நேபாள அரசியல் கட்சிகளில் மிகப்பெரியதான கே.பி.ஓலி தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி(ஐக்கிய மார்க்சிஸ்டு லெனினிஸ்டு) இந்தப் புதிய அமைப்பில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.