world

img

தீக்கதிர் உலக செய்திகள்

6 லட்சத்துக்கும் அதிகமான பாலஸ்தீனர் வெளியேற நிர்பந்தம்

கடந்த மார்ச் மாதத்திலிருந்து இஸ்ரேலின் மிரட்டலின் காரணமாக காசா பகுதியில் சுமார்  6 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது. காசாவில் உள்ள மொத்த மக்கள்தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பேர் மீண்டும் வெளியேற்றப்படவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை  இஸ்ரேல் ராணுவம் 35 முறை இடப்பெயர்ச்சி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. 

லெபனான் ராணுவம் இஸ்ரேலுக்கு கடும் கண்டனம்

லெபனான் மீது இஸ்ரேல் நடத்தி வருகின்ற தொடர் தாக்குதலுக்கு அந்நாட்டு ராணுவம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. லெபனானின் தெற்கு புறநகர்ப் பகுதியில் பெரிய தாக்குதல் நடத்திய பிறகு இந்த கண்டனத்தை லெபனான் ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்துவது, லெபனானுக்கு எதிரான இஸ்ரேலின் தொடர் நடவடிக்கைகள் லெபனான் எல்லையை ஆக்கிரமிக்கும் செயல் ஆகியவற்றையும் ராணுவம் கண்டித்துள்ளது. 

‘சர்வதேச நீதிபதிகள் மீதான தடைகளை நீக்க வேண்டும்’

சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை உடனடியாக நீக்க வேண்டும் என்று ஐ.நா அவையின் மனித உரிமைகள் தலைவர் வோல்கர் டர்க் கோரியுள்ளார். சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக அமெரிக்க அரசு எடுத்துள்ள பொருளாதாரத் தடை முடிவு என்னை ஆழமாக கலக்கமடையச் செய்துள்ளது. இதை உடனடியாக மறுபரிசீலனை செய்து திரும்பப்பெற வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

சவூதியில் இருந்து சிரியாவிற்கு  நேரடி விமான போக்குவரத்து

சவூதி அரேபியாவிலிருந்து 12 ஆண்டுகளுக்குப் பிறகு சிரியாவுக்கு நேரடி விமான சேவை  துவங்கியுள்ளது. 2011 இல் சிரியாவில் ஏற்பட்ட மாபெரும் மக்கள் போராட்டத்திற்கு பிறகு பெரும்பாலான விமான நிறுவனங்கள் சிரியாவிற்கு தங்கள் விமான சேவைகளை நிறுத்தின. ஏப்ரல் மாதம் சவூதி அரேபியாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் குழு விமான நிலையத்தை ஆய்வு செய்த பிறகு, சிரியாவுடனான விமான சேவையை மீண்டும் துவங்கும் பணியில் இறங்கியது குறிப்பிடத்தக்கது. 

காசாவில் 3 பத்திரிகையாளர்களை  படுகொலை செய்த இஸ்ரேல் 

காசா நகரில் உள்ள அல்-அஹ்லி அரபு பாப்டிஸ்ட் மருத்துவமனையின் வாசலில் டிரோன் மூலமாக இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் மூன்று பத்திரிகையாளர்கள், படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பத்திரிகையாளர்கள், பாலஸ்தீன பொதுமக்கள் என பலர் படுகாயமடைந்தனர். பாலஸ்தீன டுடே டிவியின் சுலைமான் ஹஜ்ஜாஜ், புகைப்படக் கலைஞர் இஸ்மாயில் படா, ஷாம்ஸ் செய்தி நிறுவனத்தின் சமீர் அல்-ரிஃபாய் ஆகிய மூவர் படுகொலையானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜி ஜின் பிங்கிடம் காத்திருந்து பேசிய டிரம்ப்

பெய்ஜிங்,ஜூன் 6- சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் உடனான தனது தனிப்பட்ட உறவுதான் வர்த்தக மோதலை தீர்க்கும் என கூறிவந்த டொனால்டு டிரம்ப் நீண்ட நாட்கள் காத்திருந்து ஜி ஜின்பிங் உடன் தொலைபேசி உரையாடல் நடத்தியுள்ளார்.  வரி தொடர்​பான பேச்​சு​வார்த்​தைகள் நடத்​து​வதற்​காக 90 நாட்​களுக்கு சீனப் பொருட்​கள் மீதான வரியை 145 சதவீதத்​திலிருந்து 30 சதவீத​மாக அமெரிக்க ஜனாதிபதி  டிரம்ப் குறைத்​தார். சீனா​வும் அமெரிக்கப் பொருட்​களுக்கு விதித்த வரியை 125 சதவீதத்​திலிருந்து 10 சதவீத​மாக குறைத்​தது. ஆனாலும் இரு நாடு​கள் இடையே​யான மோதல் தொடர்ந்தது.  சீனா மீது அமெரிக்கா வரிகளை விதித்த போதே சீனாவில் இருந்து அமெரிக்காவின் தொழில் துறை வளர்ச்சிக்கு தேவையான கனிம ஏற்றுமதிகள் மீது சீனா கட்டுப்பாடுகளை விதித்தது.  இத்தகைய கட்டுப்பாடுகளால் எலான் மஸ்க்கின் நிறுவனம் உட்பட பல தொழில்நுட்ப நிறுவனங்கள் நெருக்கடிகளை சந்தித்தன. இதனை சரி செய்வதற்காக சீன ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக டிரம்ப் தொடர்ந்து முயற்சி செய்து இறுதியாக தொலைபேசி வாயிலாக உரையாடல் நடத்தினார்.  இதே நேரத்தில் சீனாவின் மீது நெருக்கடியை உருவாக்க வேண்டும் என வரி அல்லாத திட்டங்களில் சீனர்கள் பாதிக்கும் வகையிலான நடவடிக்கையை அமெரிக்கா தொடர்ந்தது.  அமெரிக்காவின் கோரிக்கையின் பேரில் இந்த தொலைபேசி உரையாடல் நடைபெற்றது எனவும் சீன - அமெரிக்க உறவுகளுக்கு உரையாடலே ஒரே சரியான வழி என்றும் சீன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஜெனீவாவில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நடைபெற்ற பொருளாதார மற்றும் வர்த்தகப்பேச்சுவார்த்தை வெற்றிகரமாக இருந்தது. அந்த ஒப்பந்தத்தில் கொடுத்த தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் சீனா உறுதியாக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதே போல தைவான் தொடர்பான விஷயத்தில் அமெரிக்கா கவனமாக நடந்துகொள்ள வேண்டும் என்று ஜி எச்சரிக்கை விடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஒரே சீனா கொள்கையை அமெரிக்கா தொடர்ந்து ஆதரிக்கும் என்று டிரம்ப் உறுதியளித்தார். கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்காவில் சீன மாணவர்கள் கல்வி கற்க தடையை உருவாக்கிய டிரம்ப், இந்த  பேச்சுவார்த்தைக்கு பிறகு சீன மாணவர்களை அமெரிக்கா வில் படிக்க வரவேற்பதாகத் தெரிவித்தார். இந்த உரையாடல் சீன-அமெரிக்க உறவுகளில் பதற்றத்தை குறைத்து உறுதித் தன்மையை கொண்டுவர உதவும் எனவும் அது உலக வர்த்தகத்தில் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை உருவாக்கும் எனவும் நிபுணர்கள் கருத்து தெரி வித்துள்ளனர்.