world

img

அமெரிக்காவில் முதன்முறையாக ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு

அமெரிக்காவில் இந்த ஆண்டில் முதன்முதலாக மசாசூசெட்ஸ் நகரில் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.  குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் அண்மையில் கனடாவுக்குச் சென்று வந்தார் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பிரிட்டனில் கடந்த வாரம் குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டது. ஆப்ரிக்காவில் இருந்து திரும்பியவர்களிடம் இருந்து இந்த நோய் பரவியிருக்கலாம் என கூறப்பட்டது.

இதை தொடர்ந்து இந்த நோய் ஸ்பெயின், போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் பரவி 40க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை கண்டறியப்பட்டுள்ளது.

மாட்ரிட்டில் மட்டும் 23 பேருக்கு இந்த குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து அமெரிக்காவிலும் ஒருவருக்கு குரங்கு அம்மை ஏற்பட்டுள்ளது. அவர் சமீபத்தில் கனடாவில் இருந்து திரும்பியதாக கூறப்படுகிறது.

ஆப்ரிக்காவில் ஏற்படும் நோயான இது ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் பரவி வருவது குறித்து ஆய்வு நடத்த உலக சுகாதார அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

குரங்கு அம்மை வைரஸ் ஆர்த்தோபாக்ஸ் வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது, இந்த குடும்பத்தில் பெரியம்மையை ஏற்படுத்தும் வேரியோலா வைரஸ் மற்றும் பெரியம்மை தடுப்பூசியில் பயன்படுத்தப்பட்ட தடுப்பூசி வைரஸ் ஆகியவை அடங்கும். குரங்கு அம்மை பாதிப்பானது பெரியம்மை நோயுடன் ஒப்பிடக்கூடிய அளவுக்கு அறிகுறிகளைக் கொண்டுள்ளது, ஆனால் குறைவான தீவிரத்தன்மை கொண்டது. தடுப்பூசியின் காரணமாக 1980 ஆம் ஆண்டு உலகளவில் பெரியம்மை அழிக்கப்பட்டாலும், குரங்கு அம்மை பாதிப்பு இன்னும் மத்திய மற்றும் மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் பரவலாக உள்ளது.

இந்த நோய் அதிக அளவில் இளைஞர்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும், இது நோயினால் பாதிக்கப்பட்டோர் பயன்படுத்திய பொருட்களை உபயோகிப்பதன் மூலம் பரவலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.