world

img

குழந்தைக்காக எரியும் நெருப்பில் குதிப்பவர் யார்?

ஷெர்ம் எல்-ஷேக் காலநிலை உச்சி மாநாட்டில் தூய்மை யான காற்றிற்காக உலக அன்னையரின் குரல் ஓங்கி  ஒலிக்கிறது. காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு பில்லியன் (100 கோடி) குழந்தைகளின் நலனுக்காக குரல் கொடுக்க காப்27 மாநாட்டில் பன்னாட்டு அன்னையர் பிரதிநிதிகள் குழு வினருடன் இந்திய அணியும் இணைந்து போராடுகிறது. “தாயைத் தவிர வேறு எவரும் எரியும் நெருப்பில் இருந்து குழந்தை யைக் காப்பாற்ற தீக்குள் குதிப்பார்களா?” என்று போராடும் அன்னை யர் (Warrior moms) என்ற உலகத் தாய்மார்கள் அமைப்பின் இந்தியப் பிரிவின் இணைத் தோற்றுநர் பாவ்ரின் காந்தாரி (Bhavreen Kandhari) கூறுகிறார். இந்த அமைப்பு சூழல் சீரழிவைக் குறைக்க செயலில் இறங்கவேண்டும், சுத்தமான காற்று வேண்டும் என்ற நோக்கத்துடன் போராடுகிறது. “உங்களை உங்கள் தாயை விட இந்த உலகில் யாரும் அதிகம் நேசிக்கமுடியாது. தாயே எப்போதும் குழந்தையின் பாது காப்பிற்காக வாழ்பவள்” என்று கூறும் இவர் உட்பட ஏராளமான தாய்மார்கள் “காலநிலை மாற்றத்தில் குழந்தைகள் மற்றும் வருங்கால  உலகிற்கான பெற்றோர் வலையமைப்பு” (Our kids climate & Parents for future Global networks)  என்ற சூழல் நல குழுவின்  அங்கமாக காப்27 மாநாட்டில் கலந்துகொள்கின்றனர்.

குழந்தைகள் நலம் மற்றும் உரிமைகள்

சீரழியும் சூழலில் குழந்தைகள் நலன் காக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி இவர்கள் போராடுகின்றனர். “பூமியில் எந்த ஒரு தாய்க்கும் குழந்தையின் ஆரோக்கியமே முக்கியம். குழந்தைக்கு ஒரு வளமான வருங்காலத்தை உருவாக்கிக் கொடுப்பதே தாயின் இலட்சியம். மாசுபட்ட உலகில் இது எவ்வாறு சாத்தியமாகும்? புதைபடிவ எரிபொருட்கள் எரிக்கப்படுவதால் காற்று மாசும், காலநிலையில் தீவிர பாதிப்பும் ஏற்படுகிறது. உலக ளவில் 90 சதவிகிதத்திற்கும் கூடுதலான குழந்தைகள் அசுத்தக் காற்றையே சுவாசிக்கின்றனர்” என்று காந்தாரி கூறுகிறார். சமீபத்தில் காற்றுமாசினால் தில்லி பாதிக்கப்பட்டது. இதனால் குழந்தைகள் பாதிக்கப்படாமல் இருக்க பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன. காந்தாரியின் 18 வயது இரட்டைக் குழந்தைகளும் காற்றுமாசினால் சேதமடைந்த நுரையீரல்களுடனே வாழ்கின்றனர். அதனால் குழந்தைகளுக்கு காலநிலை மாற்றம் குறித்து பேசப்படும்  பேச்சுக்களில், ஏற்படும் உடன்படிக்கைகளில் முதலிடம் கொடுக்கப்பட வேண்டும். அரசியல் தலைவர்கள் ஏன் இதைச்செய்யமுடியாது? செய்யக்கூடாது? அவர்களுக்கும் குழந்தைகள் இருக்கிறார்கள்.

இதயம் இருக்கிறதா?

“மனசாட்சியுடன் அறிவு மற்றும் உணர்வுப்பூர்வமாக செயல்பட்டால் மட்டுமே இதைப் புரிந்துகொள்ளமுடியும். இதுபோன்ற  மாநாடுகளில் ஆட்சியாளர்களின் குழுக்கள் அரங்குகளில் எல்லா இடங்களிலும் பேசுகிறார்கள். எல்லாம் வெத்துவேட்டுகளே. அவர்கள் மக்களுடன் உணர்வுப்பூர்வமாக இணைந்து செயல்பட்டால் மட்டுமே எதையும் சாதிக்கமுடியும். உலகத் தலைவர்கள் எல்லோருக்கும் இதயமிருக்கிறது. அதில் ஊடுருவி சுற்றிலும் நடப்பதைப் புரியவைக்கவே நாங்கள்  முயல்கிறோம்’ என்று யு கே காலநிலைக்கான பெற்றோர் அமைப்பின் இணைத்தோற்றுநரும், உலகக் காலநிலை மாற்றத்திற்கான  குழந்தைகள் அமைப்பின் இணை இயக்குனருமான மயா மைலர் (MayaMailer)  கூறுகிறார். அரசியல் தலைவர்களின் குழந்தைகளும் காலநிலை மாற்றத்தி னால் பாதிக்கப்படப்போகும் வருங்காலத்தவரின் வரிசையில் நிற்கிறார்கள். குழந்தைகளைக் காப்பாற்ற தாய்மார்கள் உறுதியான மனதுடன் இருக்கிறார்கள். குழந்தைகளுக்காக எதையும் அவர்கள் செய்வார்கள் என்கிறார் இவர். உலகம் முழுதும் இந்த அமைப்பு சூழல் போராட்டத்தில் முக்கிய அங்கமாக மாறிவருகிறது.

சூடில்லா, சுகமான உலகில் வாழ...

16 நாடுகளில் வாழும் 3 முதல் 16 வயது குழந்தைகள் காலநிலை மாற்றத்தினால் எவ்வாறு பாதிக்கப்படுகின்றனர் என்பதை  எடுத்துக்கூறும் திரைப்படம் மாநாட்டின்போது வெளியிடப்பட்டது.  இப்படத்தில் டோகோ நாட்டைச் சேர்ந்த 8 வயது குழந்தை கிஸ்லைன் (Chislain) “சூடில்லாத, சுகமான, மரங்கள் அடர்ந்த உலகிலேயே நான் வாழ விரும்புகிறேன்” என்று கூறுகிறார். “காலநிலை கடிகாரம் இப்போது ஓடவில்லை. வெடித்துவிட்டது”  என்று தென்னாப்பிரிக்காவில் ஒடுக்கப்பட்ட கறுப்பினக் குழந்தை களின் சூழல் நலனுக்காகப் போராடும் அமைப்பின் (Black Girls Raising) செயல் வீரர் ஸோலி ஃபுயானி (Xoli Fuyani) கூறுகிறார். குழந்தையாக இருக்கும் போது காலநிலை மாற்றத்தைப் பற்றி நினைக்கவில்லை. தெருவில் விளையாடி, பட்டாம்பூச்சி களைத் துரத்திப் பிடித்து மகிழ்ந்தேன். ஆனால் இன்று குழந்தைகள் காலநிலை பாதிப்புகளை எதிர்த்துப் போராடுவது அநீதியானது. இது அவர்களுக்கான உலகம் என்கிறார் அவர். பாகிஸ்தானில் பெருவெள்ளம் ஏற்பட்டு 2 மாதங்களான பின்னரும் 2 மில்லியன் குழந்தைகள் பள்ளிக்குப் போக முடியாத  சூழ்நிலை உள்ளது. ஆப்பிரிக்காவின் கொம்பு என்று அழைக்கப்படும் வளமான பகுதியில் ஏற்பட்ட வறட்சியால் 10 மில்லியன் குழந்தை கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நைஜீரியாவில் 1.5 மில்லியன் குழந்தைகள் வெள்ளப்பெருக்கால் சத்துப் பற்றாக்குறை மற்றும் நோய்த்தொற்றுக்கு ஆளாகும் ஆபத்தில் வாழ்கின்றனர்.

உலகக் குழந்தைகளின் உரிமைகளுக்காக அவர்களின் குரலை ஓங்கி ஒலிக்கவே நாங்கள் வந்திருக்கிறோம் என்கிறார் பிரேசில் அலானா (Alana) குழந்தைகளின் உரிமைக்கான கால நிலை  மையத்தைச் சேர்ந்த லைஸ் ஃப்ளேரி (Lais Fleury). உலகின்  மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதி குழந்தை களே. அவர்களே காலநிலை மாற்றத்தினால் அதிகம் பாதிக்கப்படு பவர்கள். இதனால் 2021இல் ஒரு பில்லியன் குழந்தைகள் மற்றும் இளம் வயதினர் பாதிக்கப்பட்டனர். “உலகத் தலைவர்கள் வெளியில் என்ன நடக்கிறது என்று பார்க்கவேண்டும். இதை உணர்த்தவே இங்கு தாய்மார்கள் வந்திருக்கின்றனர். உடனடியாக நாம் தூய ஆற்றல் மூலங்களுக்கு மாறவேண்டும். குழந்தைகளின் நலனே உலகின் வருங்காலம்” என்று உலக சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் மரியா நெய்ரா (Dr Maria Neira) கூறுகிறார். 30 ஆண்டு காப் வரலாற்றில் இதுவரை எடுக்கப்பட்ட எந்த முடிவிலும் குழந்தைகளின் உரிமைகள் முக்கிய இடம் பெற வில்லை. காப்27 மாநாட்டிலேனும் இந்நிலை மாறுமா?

- சிதம்பரம் இரவிச்சந்திரன்