சூடானில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்த விபத்தில் 38 பேர் உயிரிழந்தனர்.
சூடான் நாட்டின் தலைநகர் கார்டோமுக்கு தெற்கே சுமார் 700 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஃபுஜா கிராமம் உள்ளது. அங்கு அரசுக்கு சொந்தமான தர்சயா தங்க சுரங்கம் அமைந்துள்ளது. இந்த தங்க சுரங்கம் மூடப்பட்டு செயல்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் மூடப்பட்டிருந்த தங்க சுரங்கத்தில் சென்று சிலர் தங்கம் எடுக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சுரங்கத்தின் மேற்கூரை இடிந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 38 பேர் உயிரிழந்தனர். 8 பேர் காயமடைந்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து இடிபாடுகளில் சிக்கிய 38 பேரை மீட்டனர். மேலும் காயமடைந்த 8 பேரை மீட்புக்குழுவினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.