world

img

வலுவான உத்தரவாதங்கள் தேவை: ஈரான் வலியுறுத்தல்

2015 ஆம் ஆண்டில் கையெழுத்தான அணுசக்தி உடன்பாடு மீண்டும் புதுப்பிக்கப்பட வேண்டுமென்றால் அமெரிக்காவிடம் இருந்து வலுவான உத்தரவாதங்கள் தரப்பட வேண்டும் என்று ஈரான் வலியுறுத்தியுள்ளது.

ஈரானின் அணுசக்தி விவகாரத்தில் 2015 ஆம் ஆண்டில் உடன்பாடு எட்டப்பட்டது. அந்த உடன்பாட்டில் இருந்து வெளியேறுவதாக அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த டொனால்டு டிரம்ப் 2018 ஆம் ஆண்டில் அறிவித்தார். அதோடு நிற்காமல், ஈரான் மீது அழுத்தம் போடுவதாகச் சொல்லிக் கொண்டு, பல்வேறு பொருளாதார மற்றும் வர்த்தகத் தடைகளை விதிக்கவும் செய்தார். தனது அழுத்தம் நிறைவேறாததால், ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா முடிவு செய்தது. ஆனால், ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் நடந்த பேச்சுவார்த்தையை இன்றுவரையில் இழுத்தடித்து வருகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் ஒரு வரைவு உடன்பாடு உருவாக்கப்பட்டுள்ளது. அது பற்றிய தனது கருத்தை ஈரான் ஏற்கனவே தெரிவித்து விட்டது. இந்நிலையில், அமெரிக்காவின் கருத்தும் பெறப்பட்டுள்ளது. அதைப் படிக்கும் வேலையைத் தொடங்கி விட்டோம் என்று தெரிவித்துள்ள ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் உசேன் அமீர் அப்துல்லாஹியான், "அமெரிக்காவிடமிருந்து வரைவு உடன்பாடு பற்றிய கருத்து அனுப்பப்பட்டிருக்கிறது. வெளியுறவுத்துறை அதிகாரிகள் அதைப் படித்து வருகிறார்கள். ஆனால், உடன்பாட்டை எட்ட வேண்டுமென்றால் அமெரிக்காவிடமிருந்து வலுவான உத்தரவாதங்கள் தேவை" என்று கூறியுள்ளார்.

ரஷ்யப் பயணம் மேற்கொண்டுள்ள அப்துல்லாஹியான், செய்தியாளர்களைச் சந்திக்கும்போது இவ்வாறு குறிப்பிட்டார். அப்போது அவருடன் ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் உடன் இருந்தார்.  நல்ல, வலுவான மற்றும் நீடித்து நிலைக்கக்கூடிய உடன்பாட்டை எட்ட வேண்டும் என்பதே ஈரானின் நோக்கமாகும் என்று அவர் குறிப்பிட்டார்.