அமெரிக்காவின் கென்டகியில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 9 பேர் பலியாகியுள்ளனர்.
அமெரிக்க மத்திய கிழக்கு மாகாணங்களில் கடந்த சில நாள்களாக தொடர் கனமழை பெய்து வந்தது. இதனால் கென்டகி, வர்ஜீனியா, மேற்கு வர்ஜீனியா, டென்னசி, ஆர்கன்சாஸ் ஆகிய மாகாணங்களில் கடும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மக்களின் குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்து வாகனங்களும் நீரில் மூழ்கின. மேலும் மண்சரிவுகளால் பல்வேறு சாலைகளில் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது.
கென்டகி மாகாணம் முழுவதும், மேற்கு வர்ஜீனியாவின் 10 பகுதிகளிலும் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. கடும் வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட கென்டகி ஜாக்சன் நகர் போன்ற பகுதிகளில் பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், கென்டகியில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை ஒரு குழந்தை உட்பட 9 பேர் பலியாகியுள்ளனர் என்று அம்மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளார்.