மைக்ரோசாப்ட் தனது நிறுவனத்திலிருந்து 1800 பேரை வேலையிலிருந்து நீக்கியதால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் ஜூன் 30 ஆம் தேதியுடன் கடந்த நிதியாண்டு முடிந்து புதிய நிதியாண்டு தொடங்கிவிட்டது. இந்த நிதியாண்டில் நிறுவனத்தின் கட்டமைப்பு சீரமைக்கப்போவதாக கூறி, இந்த பணிநீக்கத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் செய்துள்ளது. அதே வேளையில் மைக்ரோசாப்ட் தொடர்ந்து புதிய ஊழியர்களை பணியில் அமர்த்தும் என்றும், நடப்பு நிதியாண்டில் அதிகமான பணியாளர்களை எடுப்போம் என்றும் தெரிவித்துள்ளது.
தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் சுமார் 1.80 லட்சம் ஊழியர்கள் வேலை செய்து வரும் நிலையில் அவர்களில் சுமார் 1800 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
1800 என்பது பெரிய எண்ணாக தெரிந்தாலும், மொத்த ஊழியர்களில் ஒரு சதவீதம் தான் என்பது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விளக்கமாக உள்ளது. உலகெங்கிலும் உள்ள பல்வேறு பகுதிகளில் பணிபுரிந்த ஆலோசனையாளர்கள், வாடிக்கையாளர்களுடன் தொடர்பு உடையவர்கள் மற்றும் சில பிரிவுகளில் உள்ளவர்கள் வேலையிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
அதேநேரம் வர்த்தகத்தை தொடர்ந்து மேம்படுத்துவதிலும் முதலீடு செய்து, வரும் ஆண்டில் ஒட்டுமொத்த எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நெட்பிளிக்ஸ், மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் கைகோர்க்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடப்பு ஆண்டில் ஜனவரி முதல் மார்ச் வரையிலான 3 மாத காலத்தில், நெட்பிளிக்ஸில் இரண்டு லட்சம் சந்தாதார்களை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் கூகுள் நிறுவனமும் நடப்பு நிதியாண்டில் ஊழியர்களை புதிதாக பணிக்கு எடுப்பதை குறைக்கவுள்ளதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். மேலும் பொறியியல், தொழில்நுட்பம் பிரிவுகளில் மட்டும் ஊழியர்களை பணியமர்த்துவதில் கவனம் செலுத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளது.