கெய்ரோ, நவ.12- தங்கள் கடன்களை செலுத்த முடியாததால் கிட்டத்தட்ட 50 ஏழை நாடுகள் திவால் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா பெருந்தொற்றுக்கு முன்னதாகவே ஏழை நாடுகள் கடன் வாங்கிக் கட்ட முடியாமல் திணறிக் கொண்டிருந்தன. பெருந்தொற்று கடன் பிரச்சனையை பெரும் நெருக்கடியாக மாற்றி விட்டது. கடன் கொடுத்த நிறுவனங்களும், நாடுகளும் கடனுக்கான வட்டியை அதிகப்படுத்தியுள்ளன. திருப்பித் தர வேண்டிய தொகை பெரும் அளவில் உயர்ந்துள்ளது.
இந்நிலையில் தற்போது எழுந்துள்ள எரிபொருள் விலை உயர்வு நெருக்கடி மேலும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.
எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடைபெற்று வரும் 27ஆவது காலநிலை மாநாட்டில் பேசிய ஐக்கிய நாடுகள் சபையின் உலக வளர்ச்சித் திட்டத்தின் தலைவர் அசிம் ஸ்டெய்னர் இது குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். அப்போது பேசிய அவர், "எரிபொருள் விலையுயர்வும், வட்டிவிகிதங்கள் அதிகரித்திருப்பதும் பெரும்பாலான நாடுகளுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன. அந்நாடுகள் கடன்களைத் திரும்பச் செலுத்த முடியாத நிலை உருவாகியிருக்கிறது. இந்நிலை அந்நாட்டு மக்கள் மீது பெரும் பேரழிவுத் தாக்கத்தை ஏற்படுத்தும்" என்று கூறியுள்ளார்.
இந்த நாடுகளை ஐக்கிய நாடுகள் சபையின் உலக வளர்ச்சித் திட்ட அமைப்பு பட்டியலிட்டுள்ளது. அந்த அமைப்பின் கணக்கின்படி ஏழை நாடுகள் மட்டுமல்லாமல், நடுத்தர நாடுகளும் நெருக்கடியில் சிக்கியிருக்கின்றன. ஆனால், பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ள ஏழை நாடுகளைப் பட்டியலிட்டு, உடனடியாக உதவிகள் தரப்படவில்லை என்றால், பேரழிவுக்கு இட்டுச் செல்லும் என்று எச்சரித்துள்ளார்கள்.
வாக்குறுதிகளைக் காப்பாற்றுங்கள்
உதவி செய்வோம் என்று ஒவ்வொரு முறையும் மாநாடுகளில் வளர்ந்த நாடுகள் வாக்குறுதிகளைக் கொடுத்து வருகின்றன. அந்த வாக்குறுதிகள் மாநாடுகளிலேயே முடிந்து போகின்றன என்று குற்றம் சாட்டும் ஸ்டெய்னர், "கடன் நெருக்கடியைத் தீர்க்காவிட்டால் இதுபோன்ற காலநிலை மாற்ற மாநாடுகளால் எந்தவித பலனும் இருக்கப் போவதில்லை. இந்த ஏழை நாடுகளால் காலநிலை மாற்றத்திற்கு எதிராக எதுவும் செய்ய முடியாது. ஏழை நாடுகளுக்குத் தருவதாக பணக்கார நாடுகள் சொன்ன தொகை தரப்படுவதில்லை" என்று சுட்டிக்காட்டினார்.
காலநிலை மாற்ற மாநாட்டில் பேசிய ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், "மீட்க முடியாத நிலையை நோக்கி இந்த உலகம் சென்று கொண்டிருக்கிறது. 100 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி குறித்த ஒரு ஒன்றிணைந்த பாதையை இந்த மாநாடு உருவாக்கவில்லை என்றால், வளரும் மற்றும் ஏழை நாடுகள் கால நிலை மாற்றம் பற்றி யோசிப்பதையே நிறுத்தி விடும் நிலை ஏற்படும்" என்று எச்சரித்தார்.