world

img

தீக்கதிர் உலக செய்திகள்

பாக். பங்குச் சந்தை  அலுவலகத்தில் தீ 

பாகிஸ்தானின் பங்குச் சந்தை அலுவலக கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தலைநகர் கராச்சியில் உள்ள அந்த வர்த்தக மையத்தின் நான்காவது கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தை தொடர்ந்து பங்குச்சந்தை வணிகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மின்கசிவின் காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர். உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.  

சட்டவிரோத சுரங்கத்தில்  11 தொழிலாளர்கள் பலி

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் உள்ள சட்டவிரோத தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில்  11 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 45 பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தீவில் ஏற்பட்ட கன மழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் சுரங்கத்திற்கு அருகில் வசிக்கும் மக்கள் சிக்கிக்கொண்டதாக  மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.

காசா ஐநா தலைமையகத்தில்  இஸ்ரேல் தாக்குதல் 

காசா நகரில் உள்ள பாலஸ்தீன அகதிகளுக்கான ஐநா தலைமை யகத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலை நியாயப் படுத்துவதற்காக தலைமையகத்தில் ஹமாஸ் அமைப்பின் ஆயுதங்கள் இருந்ததாக ஆதாரமற்ற குற்றச்சாட்டை இஸ்ரேல் முன்வைத்துள்ளது.மேலும் திங்களன்று மட்டும் 40 பாலஸ்தீனர்களை படுகொலை செய்துள்ளது இஸ்ரேல் ராணுவம்.

உரிமங்களை ரத்து செய்வதை  திரும்பப் பெற்றது தென்கொரியா

வேலைநிறுத்தம் செய்யும் மருத்து வர்களின் உரிமங்களை ரத்து செய்யும்  திட்டத்தை திரும்பப் பெறுவதாக தென் கொரிய அரசு தெரிவித்துள்ளது. போதிய காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட  சுகா தாரத்  துறையின்   பிரச்சனைகளையும் சரி செய்யாமல் மருத்துவ இடங்களை அதிகரிக்கக் கூடாது என 10 ஆயிரத்துக்கும் அதிகமான தென்கொரிய மருத்துவர்கள் வேலைநிறுத்தத் த்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களது உரிமத்தை ரத்து செய்வதாக மிரட்டிய அந்நாட்டு அரசு தற்போது பின்வாங்கியுள்ளது.

வெனிசுலா ஜனாதிபதி  தேர்தல் துவங்கியது

வெனிசுலாவின் ஜனாதிபதி தேர்தல் ஜூலை 28 அன்று நடைபெற உள்ளது.  ஜூலை 25 வரை தேர்தல் பிரச்சாரம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  வெனிசுலாவின்  ஐக்கிய சோசலிஸ்ட் கட்சியை (PSUV) சேர்ந்த தற்போதைய ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் வலதுசாரிக் கட்சியான ஐக்கிய ஜனநாயக தள  தலைவர் எட்மண்டோ கோன்சாலஸ் ஆகிய இருவரும் போட்டியில் முன்னணியில் உள்ளதாக உள்ளனர்.