உலகமே இரண்டு காட்சிகளை அதிர்ந்து, வியந்து பார்க்கிறது. ஒரு புறம் ஜனாதிபதி மாளிகையை விட்டு தப்பி ஓடுகிறார். இன்னொரு புறம் அவரது மாளிகைக்குள் உள்ள நீச்சல் குளத்தில் போராட்டக்காரர்கள் குளித்து நீராடுகிறார்கள். குளியல் அவர்களின் உடல் வெப்பத்தை தணிக்கலாம். ஆனால் அனலாய் தகிக்கும் மனது அவ்வளவு எளிதாக ஆறி விடாது. 100 நாட்களுக்கும் மேலாக இலங்கை இந்த கொந்தளிப்பை சந்தித்து வருகிறது. சனிக்கிழமை மக்கள் கைகளுக்கு ஜனாதிபதி மாளிகை வந்து விட்டது. பிரதமர் இல்லத்திற்கு நெருப்பு வைக்கப் பட்டுவிட்டது. காரணம் மக்கள் அன்றாடத் தேவை களுக்கே அல்லாட வேண்டியுள்ளதால் எழுந்துள்ள கோபம்.
பாலின்றி பிள்ளையழும்
ஒரு நாள் உணவுக்கு ரூ 2000 தேவைப்படுகிறது என்று செய்திகள் சொல்கின்றன. நம்ப முடிகிறதா? அங்கு கிலோ அரிசி ரூ 230 இல் தான் துவங்கு கிறது. பணவீக்கம் - அதாவது விலைவாசி உயர்வு ஜூன் மாதம் 54.6 சதவீதம். போன ஜூலை முதல் கணக்கு பார்த்தால் ஓராண்டில் 80 சதவீத உயர்வு. போக்குவரத்து கட்டணங்கள் 128 சதவீத உயர்வு. பெட்ரோல் கிடைக்கவில்லை. குழந்தைகளுக்கு பால் கிடைக்கவில்லை. 70 சதவீத இல்லங்கள் உணவைக் குறைத்து கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் சிறார் நிதியம் (யுனிசெப்) தெரிவித்துள்ளது. சர்வதேச சுகாதார அமைப்பு ( World Health Organisation - WHO) பரிந்துரைக்கும் உணவை இன்று இலங்கை குடிமக்கள் எடுத்துக் கொள்ள மாதம் ரூ 93,675 முதல் ரூ.1,48,868 வரை ஆகலாம் என்று உணவுப் பாதுகாப்பு நிபுணர் ரெகானா தௌபிக் மதிப்பிட்டுள்ளார். ஆனால் இலங்கை குடிமக்க ளின் சராசரி வருமானமே இன்று ரூ 76414 தான். அதிலும் பொருளாதார அடுக்கின் கடைசி 20 சதவீத அடுக்கில் உள்ளவர்கள் வெறும் ரூ 17572 தான் சராசரி வருமானத்தை கொண்டு இருக்கிறார்கள்.
சீனக் கடனா காரணம்?
மிக முக்கியமான காரணங்களாக கோவிட் சூழல், ஊழல், ராஜ பக்சே குடும்பத்தினரின் அதிகார துஷ்பிரயோகம், குடும்ப ஆட்சி ஆகியன பேசப்படுகிறது. இவை எல்லாம் காரணங்கள் தான். ஆனால் உண்மை அதை எல்லாம் கடந்தும் இருக்கிறது. இலங்கையின் இப் பிரச்னைக்கு சீனக் கடன் காரணம் என ஊடகங்களில் தீவிரமாக பேசப்படுகிறது. இந்திய கார்ப்பரேட் ஊடகங்கள் இக் காரணத்தை பற்றி அதிகமாக எழுதுகின்றன. அன்னியக்கடன் சுமை காரணம் என்பது உண்மை. ஆனால் சீனக் கடன் மொத்தத்தில் 10 சதவீதம்தான். ஆசிய வளர்ச்சி வங்கி, ஜப்பான் ஆகியவை சீனாவை விட அதிகமான கடன்களை தந்துள்ளவை. நெருக்கடி காலத்திலும் சீனா நிதி உதவியை செய்துள்ளது. ஐ.எம். எப் கடன்களைத் தான் இப்போது இலங்கை விவாதித்து கொண்டு இருக்கிறது. அதில் கரன்சி மதிப்பு குறைப்பு உள்ளிட்ட கடும் நிபந்தனைகள் உள்ளன. USAID என்று அழைக்கப்படும் அமெரிக்க உதவிகள் எல்லாம் பன்னாட்டு நிறுவனங்களின் ஒப்பந்தங் களுடன் இணைந்ததுதான். NO FREE LUNCH (இலவச உணவு என்ற பேச்சுக்கே இடமில்லை) என்பதுதான் உலக நிதி நிறுவனங்களின் நியதி. இந்தியா கூட அதானிக்கு ஒப்பந்தத்தை தர வேண்டுமென்று நிர்ப்பந்தி்த்ததாக, நாடாளுமன்ற நிலைக் குழுவின் முன்பு இலங்கை மின்சார வாரிய தலைவர் பெர்டினாண்ட் வாக்கு மூலம் அளித்தார். ஆகவே மூன்றாம் உலக நாடுகள் தங்களின் சுயசார்பை, அந்நிய மூலதனத்தின் மீதான கடி வாளத்தை, மக்கள் நலன் சார்ந்த பொருளாதாரப் பாதையை உறுதி செய்கிறதா என்பதே விவாதத்தின் மையமான அம்சமாக இருக்க வேண்டும்.
ஒப்பீட்டு பயன் கருத்தாக்கம்
பொருளாதாரத்தில் “ஒப்பீட்டு பயன் கருத்தாக்கம்” (Theory of Comparative Advantage) என்று பேசுவார்கள். சில பகுதிகள் சில தொழில்களுக்கான உற்பத்தி தலங்களாக, விற்பனை தலங்களாக ஒதுக்கீடுகளுக்கு உள்ளாகும். ஒரு நகரத்தில் எங்கே இரும்பு சாமான்கள் கிடைக்கும், எங்கே லெதர் கிடைக்கும், எங்கே எலக்ட்ரிக் பொருள்கள் கிடைக்கும் என்று நமக்கு தெரியும். ஆனால் மால்கள் வந்த பிறகு எல்லாமே ஒரு மையத்திற்கு போக ஆரம்பித்துவிட்டன. மாநிலங்களுக்குள் வேலைப் பிரிவினை இருக்கிறது. அரிசி ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்திற்கு போகிறது. மார்பிள் டைல்ஸ் ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்திற்கு போகிறது. ஆனால் இவ் வேலைப் பிரிவினையில் அந்நியச் செலாவணி பிரச்சனை வராது. காரணம், ஒரே நாட்டிற்குள் கொடுக்கல், வாங்கல் என்பதால்... ஆனாலும் ஏற்றத் தாழ்வான வளர்ச்சி வரலாம். உலகச் சந்தையிலும் இந்த வேலைப் பிரிவினை அமலாக்கப்படுகிறது. இலங்கை விவசாய, உரத்திற்கு, எரிபொருள் ஆகியவற்றுக்கு அயல்நாடுகளை சார்ந்து இருக்கிறது. அதன் பிரதான வருவாய் சுற்றுலாவில் இருந்தே கிடைத்து வந்தது. கோவிட் பெருந் தொற்று சுற்றுலா வரு மானத்தை கடுமையாக பாதித்தது. இதனால் அந்நிய செலாவணி வரத்து குறைந்தது. வெளிநாடு வாழ் இலங்கை மக்கள் அனுப்பி வந்த அந்நியச் செலாவணியும் வீழ்ந்தது. அந்நியச் செலாவணி நெருக்கடியை சமாளிக்க, உர இறக்குமதியை குறைக்க, இயற்கை விவ சாயம் என்று முன் தயாரிப்பு இல்லாமல் அறி வித்தது உணவுப் பஞ்சத்திற்கு கொண்டு போய் விட்டுள்ளது. உலகமய காலத்தில் “ஒப்பீடு பயன் கோட்பாடு” ( Theory of Comparative Advantage) என்ற வேலைப் பிரிவினையின் தோல்வி என்று இலங்கை நிகழ்வுகளை மதிப்பிடலாம். இப்படி உணமையை நாம் தேட இன்னும் ஆழமாக பயணிக்க வேண்டும்.
விவாதங்களின் திசை வழி
இன்னொரு முக்கியமான அம்சமும் உண்டு. இலங்கை அரசின் வலதுசாரிப் பாதையானது “பௌத்த தேசிய இன வாதம்” என்ற திசை திருப்பலில் சிங்கள மக்களை வீழ்த்த முனைந்த வியூகம் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. முதலாளித்துவ லாப வேட்டைக்கு எளிய மக்கள், நடுத்தர மக்களின் நலன் பலியாகும் என்பதும் நிரூபணம் ஆகியுள்ளது. இலங்கை படிப்பினைகள் மாற்று பொருளாதாரப் பாதை நோக்கி நமது கவனம், விவாதங்களை திருப்ப வேண்டும். ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல் உலகக் கடனை அடைக்கிற சுமையை இலங்கை குடிமக்கள் தாங்கித் தள்ளாடும் நிலையிலாவது நாம் சரியான பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டாமா?