உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் பொதுக் குளியலறைக் கூடங்களுக்கு பெண்கள் செல்வதற்கு ஆப்கானிஸ்தானின் அதிகாரத்தில் இருக்கும் தாலிபன்கள் தடைவிதித்திருக்கிறார்கள்.
பொது இடங்களைப் பயன்படுத்துவதில் ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு ஏற்கனவே நிறையத் தடைகள் இருக்கின்றன. கொஞ்சம், கொஞ்சமாக அவர்கள் பொது இடங்களுக்கு வருவதிலிருந்து தடுக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்படுகிறார்கள். பெரும்பாலான பெண் அரசு ஊழியர்கள் தங்கள் வேலைகளை இழந்துவிட்டனர். ஆண் துணையின்றி பெண்கள் பயணம் மேற்கொள்ள முடியாது. வீடுகளை விட்டு வெளியே வருகையில் உடலையும், தலையையும் மறைத்துக் கொள்ளும் புர்கா மற்றும் ஹிஜாப் போன்ற ஆடைகளுடன்தான் இருக்க வேண்டும்.
ஏற்கனவே பெண் குழந்தைகளுக்கான பள்ளிக்கூடங்கள் பெரும்பாலும் மூடப்பட்டு விட்டன. தற்போது உடற்பயிற்சிக் கூடங்களுக்கு பெண்கள் செல்லக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. பயிற்சியாளர்கள் ஆண்களாக இருப்பதாலும், பெரும்பாலான பயிற்சிக் கூடங்கள் இருபாலருக்குமானதாக இருபபதாலும் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தாலிபன் அமைச்சரான முகம்மது ஆகிப் சாதிக் முகாஜிர் கூறியுள்ளார்.
அதே போன்று, பொதுக் குளியலறைகளுக்கு பெண்கள் செல்லக் கூடாது என்றும், அவரவர் வீடுகளில் இந்த வசதி இருப்பதால், பொதுக் குளியலறைகளுக்குப் பெண்கள் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறியிருக்கிறார்கள். இந்தப் புதிய தடைகளுக்கு எதிராகக் குரல்கள் எழுந்துள்ளன. பெண்களுக்காக என்று பெண் பயிற்சியாளர்களோடு இருக்கும் உடற்பயிற்சிக் கூடங்களைக் கூட மூடி விட்டார்கள் என்று சமூக ஆர்வலர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.