1948 ஹைதரா பாத்தை இந்தியாவுடன் இணைத்த ஆப்பரேஷன் போலா நடவடிக்கை தொடங்கியது. ஆங்கிலேய ஆட்சியின்போது, கப்பம் செலுத்தும் ஒப்பந்தங்களின்மூலம், பல பகுதிகள் மன்னராட்சியின்கீழேயே தொடர்ந்தன. இவ்வாறான 565 மன்னராட்சிப் பகுதிகள் விடுதலையின்போது இருந்தன. விடுதலையடைந்தபோது, அவற்றில் 552 இந்தியாவுடனோ, பாகிஸ்தானுடனோ இணைந்துவிட்டன. தங்கள் நிலையிலேயே தொடர்வதற்கான ‘ஸ்டேண்ட்ஸ்டில்’ ஒப்பந்தங்களை, புதிதாக உருவான இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடனும், ஜம்மு-காஷமீர், ஜூனாகத், கலாட், ஹைதராபாத் உள்ளிட்ட சில மன்னராட்சிப் பகுதிகள் செய்துகொண்டன. இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருந்து, இந்து அரசரால் ஆளப்பட்ட காஷ்மீர், பாகிஸ்தான் ஆக்கிரமிக்க முயற்சித்ததையடுத்து இந்தியாவுடன் இணைந்தது. ஹைதராபாத், குஜராத்தின் ஜூனாகத் ஆகியவற்றில் பெரும்பான்மை மக்கள் இந்துக்களாகவும், அரசர்கள் இஸ்லாமியராகவும் இருந்தனர். பாகிஸ்தானுடன் இணைய முயன்ற ஜூனாகத்தை, 1947 நவம்பரில் இந்தியா இணைத்துக்கொண்டது(வாய்ப்பிருந்தால் மற்றொரு நாளில் விரிவாகக் காணலாம்!). ஸ்டேண்ட்ஸ்டில் ஒப்பந்தத்துக்கு மூன்று மாத நீட்டிப்புப் பெற்ற ஹைதராபாத் நிஜாம், இந்தியாவுடன் இணைத்தால் அங்கு இரத்தக்களரி ஏற்படும் என்று கூறி, தனி நாடாகவே இருக்க முயற்சித்தார். அதற்கு இந்தியா உடன்பட்டு, புதிய ஒப்பந்தத்தை அனுப்பியபோது அதிலும், திருத்தங்களை வேண்டினார். விடுதலைக்கு முன்பு ஆங்கிலேய ராணுவத் தளங்கள் அங்கு இருந்திருந்தாலும், தற்போது இந்திய ராணுவம் அங்கு இருக்க அவரது திருத்தம் அனுமதிக்கவில்லை. இந்தியா ஆறு மாதங்களில் படிப்படியாக ராணுவத்தை விலக்கிக்கொண்டாலும், இந்தியாவுடனான ரயில் உள்ளிட்ட போக்குவரத்துகளுக்குத் தடை, தனியார் ராணுவத்தை உருவாக்கியது, பாகிஸ்தானுடன் தொடர்பு என்று பல விதங்களில் ஒப்பந்தத்தை ஹைதராபாத் மீறியது. ரஸாக்கர்கள் என்ற மதத்தீவிரவாதிகளின் படை, மத நல்லிணக்கத்திற்கும், பொது அமைதிக்கும் இடையூறு விளைவித்த நிலையில், அவர்களைத் தடைசெய்ய வேண்டுமென்றும், மக்களின் பாதுகாப்புக்காக இந்திய ராணுவத்தை நிறுத்த அனுமதிக்க வேண்டும் என்று 1948 ஆகஸ்ட் 31இல் இந்தியா எச்சரிக்கை விடுத்தது. நிஜாம் இவற்றை ஏற்காததால், செப்டம்பர் 13இல் இந்தியா ராணுவம் ஹைதராபாத்துக்குள் நுழைந்து, ஆப்பரேஷன் போலோவைத் தொடங்கியது. ஏற்கெனவே தெலுங்கான விவசாயிகளின் ஆயதப் போராட்டத்தால் நெருக்கடியிலிருந்த நிஜாம் 4 நாட்களின் சரணடைந்து, இந்தியாவுடன் ஹைதராபாத்தை இணைக்கும் ஒப்பந்தத்தில் 1948 நவம்பரில் கையெழுத்திட்டார்.