what-they-told

img

உழைக்கத் தயங்காத சூரியன்

ஓளிமயமான 
எதிர்காலம் தெரிவதாய்
ஓங்கி ஒலிக்கிறான் 
நடைபாதையில் 
பார்வையற்ற சிறுவன்

கைகளில் செருப்புத்தேய 
பலகையை நகர்த்தி 
எறும்புப் பென்சில் விற்கிறான்  
சாலையிலொருவன்

எல்லா நாளும்  
இரைதேடிப் பறக்கின்றன
ஏதோவொன்று கிடைக்குமென்ற
நம்பிக்கையில் பறவைகள்

ஒரு பூ உதிர்ந்த  
அதே கிளையில்
அடுத்த மொட்டை 
அவிழ்க்கிறது செடியொன்று

இன்றே கடைசி எனும்போதும்  
மடியும்வரை
மகிழ்ந்தே பறக்கிறது ஈசல்.

உழைப்பின் கிளைகள்
    கருணையற்று 
முறிக்கப்பட்டதற்காக விசும்பாதே
விழுந்த இடத்தில்  
வீரியமாய் முளைக்கும்
நல்ல விதை

தேய்ந்து வளரும் நிலவல்ல  
தினந்தோறும்
உழைக்கத் தயங்காத சூரியன் 
நீயென
உணரு! உணர்த்து...

காசாவயல் கண்ணன்