கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் செங்கோட்டை சாலையில் மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு பின்னர் துவங்கும் மலைகளின் பெரிய நகரம் புனலூர். தென்காசியிலிருந்து மலைகளின் ஊடே இந்நகரத்திற்கு ரயிலில் வருவது அழகான ஒரு அனுபவம். இந்நகரத்தின் கீழ்பகுதியில் கல்லடையாற்றின் குறுக்கேதான் படத்தில் நாம் காணும் பாலம் உள்ளது. இது 143 ஆண்டுகள் பழமையானது. மலையாளத்தில் தூக்கு பாலம் என்றும் ஆங்கிலத்தில் சஸ்பென்சன் பிரிட்ஜ் என்றும் தமிழில் தொங்கு பாலம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியாவில் இந்த பாலம் மேற்குவங்கத்தின் ஹவுராவிற்கு அடுத்துக் கட்டப்பட்ட பிரமிக்க வைக்கும் பொறியியல் நுட்பம் கொண்ட ஒரே தொங்கு பாலம் எனலாம். ஆறுகளை கடப்பதற்கும் போக்குவரத்து தேவைக்காகவும்தான் பாலங்கள் கட்டப்படுவது வழக்கம். ஆனால் இந்த பாலம் கட்டப்பட்டதன் தேவை, நோக்கம், அதன் வரலாறு வித்தியாசமானது. சுவாரசியமானது. பாலத்திற்கும் கிழக்கே பழைய காட்டுபத்தனாபரம் பகுதியின் அடர்ந்த வனப்பகுதியிலிருந்து யானைகள், காட்டுப்பன்றிகள் போன்ற மிருகங்கள் புனலூர் வசிப்பிடங்களுக்குள் புகுந்து உயிரிழப்புகள் உள்பட பெரிய சேதங்களை ஏற்படுத்தி வந்தன. எனவேதான் திருவிதாங்கூர் அரசர் சித்திரை திருநாள் 3ஆம் ராமவர்மா இந்தப் பாலத்தைக்கட்டியதாகவும் . யானைகள் காட்டுப்பன்றிகள் கூட்டமாக வந்தால் தொங்கு பாலம் ஆடும் என்பதால் மிருகங்கள் அச்சப்பட்டு வராது என இந்த பாலத்தின் தேவை பற்றிய ஒரு கதை கூறுகிறது. இப்பாலத்தின் பொறியியல் நுட்பத்தை பிரிட்டிஷ் கட்டுமான பொறியாளர் ஆல்பர்ட் ஹென்றி வடிவமைத்தார். சைக்கிள் செயினை போன்ற கிளிப்புகளால் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்ட பிரம்மாண்டமான ஸ்டீல் சங்கிலியின் ஒருமுனை பாலத்தின் கீழ்புறத்தில் இடதுபக்கம் உருவாக்கப்பட்ட 100 அடி ஆழ கிணற்றில் இறுக்கப்பட்டு பாலத்தின் நடுவில் எழுப்பப்பட்ட இரண்டு வளைவுகளின் ஊடே சங்கிலி கொண்டு வரப்பட்டு பாலத்தின் மேல்கரையில் 100 ஆடி ஆழ இடப்புற கிணற்றின் இறுக்கப்பட்டும் அதே போல் கீழ்புறத்தில் வலது பக்கம் உள்ள கிணற்றில் சங்கிலியின் ஒரு முனை இறுக்கப்பட்டு இரண்டு வளைவுகள் வழியாக கொண்டு வரப்பட்டு பாலத்தின் மேல்கரையில் வலப்புற கிணற்றில் இறுக்கப்பட்டுள்ளது. பாலத்தின் மேல் தளம் கப்பல் மேல்தள பொறியியல் நுட்பத்தில் உருவாக்கப்பட்டது. இத்தளத்தின் இடப்புற வலப்புற உருக்கு தண்டவாளங்களை சங்கிலிகளின் கிளிப்புகளோடு மிகப்பெரும் உருக்கு ராடுகள் இணைக்கின்றன. பொறியியல் மாணவர்களின் ஒரு களஆய்வுக்குழுவினர் பாலத்தின் மேல்புறம் கீழ்புறமாக இரண்டிரண்டு என நான்கு கிணறுகளும் ஒன்றுக்கொன்று அடியில் பிணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் கப்பல் மேல தள அசைவைப் ஏற்படுத்தும் வகையில் சங்கிலித்தொய்வு (Sag) நுட்பமாக உருவாக்கப்பட்டது என்று நமக்கு விவரித்தனர். பாலத்தைப் பற்றிய சமஸ்தான கதைகளுக்கு அப்பால் ஒரு உண்மையான வரலாற்றுப் பின்னணியும் இருந்தது. 18ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் அதாவது மார்த்தாண்ட வர்மா (1729) காலத்தில் துவங்கிய திருவிதாங்கூரின் எல்லையும் வரலாறும் தெற்கில் கன்னியாகுமரி முதல் வடக்கில் கொச்சியின் எல்லைகள் வரை நீண்டது. இம்முயற்சியில் மார்த்தாண்ட வர்மா பிரிட்டிஷ் அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் மூலம் அவரது எதிரிகளாக இருந்த நிலப்பிரபுக்களின் செல்வாக்குகள் ஒழித்துக் கட்டப்பட்டன. திப்பு சுல்தானின் நேர் எதிரியான பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துடன் கூட்டு வைத்திருந்ததால் திருவிதாங்கூர் மீதும் திப்பு சுல்தானின் கோபப் பார்வை திரும்பியது. திப்பு சுல்தானை எதிர்ப்பதில் ஆங்கிலேயருக்கு உதவி செய்வதற்காக நவீன ஆயுத பயிற்சியை திருவிதாங்கூர் நிர்வாகம் கோரியது.எதைச் செய்தாலும் எதிர்கால ஆதாயத்தை அதற்குள் பொதிந்து வைப்பதுதானே ஆங்கிலேயர்கள், ஆரியர்களின் வரலாற்று வழக்கம். அதனால் பயிற்சி அளிப்பதற்கு பதிலாக ஆங்கில ராணுவத்தின் இரண்டு பட்டாலியன்கள் திருவிதாங்கூரில் வந்து இறங்கின. 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலேயரின் முதல் பெரும் வேட்கை திருவாங்கூரில் உள்ள தங்கள் பிடியை மேலும் இறுக்கிக்கொள்வதாக மாறியது. பிரிட்டிஷ் பார்வையாளர் ஒருவர் நிரந்தரமாக திருவிதாங்கூரில் குடியேற பணியமர்த்தப்பட்டார். சுருங்கக்கூறினால் பிரிட்டனின் மறைமுக காலனியப் பிடியில் இயங்கிய விரிந்து பரந்த பூமியாக திருவிதாங்கூர் மன்னராட்சி மாறியது. இயற்கை மற்றும் வனவளம் மிகுந்த திருவிதாங்கூர் பகுதிகளைச் சுரண்டவும் சென்னை ராஜதானியுடன் இணைக்கவும் புனலூரில் தொங்கு பாலம் மற்றும் ரயில்வே கட்டமைப்பு வசதிகள் ஆங்கிலேயருக்கு தேவைப்பட்டன. இதற்காகவே சென்னை ராஜதானியின் கவர்னர் 1872 ஆம் ஆண்டில் திருவிதாங்கூருக்கு வந்தார். திருவிதாங்கூர் திவான் டி மாதவ ராவ் புனலூர் பாலத்திட்டத்தை புறக்கணித்தாலும் மன்னரால் அது ஏற்கப்பட்டது. பாலத்திற்கு தேவையான உருக்குத் தண்டவாளங்கள், சட்டங்கள், சங்கிலிகள் எல்லாம் பிரிட்டனிடமிருந்து கடல்வழியாக கொல்லம் துறைமுகத்தில் வந்திறங்கின. யானைகள் பயன்படுத்தப்பட்ட வண்டிகள் மூலமாக புனலூருக்கு கொண்டு வரப்பட்டன. 2212 நாட்களில் 250 தொழிலாளர்களின் கடுமையான உழைப்பில் 400 அடி நீள புனலூர் தொங்குபாலம் 1877-இல் உருவானது. துவக்கத்தில் புனலூர் மக்கள் இந்த பாலத்தின் மீது நடப்பதற்கு அச்சப்பட்டனர். பாலத்தின் மீது ஆறு யானைகள் நடக்கும்போதே ஆல்பர்ட் ஹென்றி தனது குடும்பத்துடன் ஒரு படகில் பாலத்தின் அடியில் சென்றார். அதன் பின்னரே மக்களின்அச்சம் நீங்கியது. (பொறியியல் ஆராய்ச்சியின் சர்வதேச இதழ் IJIREM Jaè 2019). இதே காலகட்டத்தில்தான் 108 மைல் நீளமுள்ள கொல்லம் செங்கோட்டை ரயில் பாதை திட்டமிடப்பட்டது. 1899 இல் ரயில் தட கட்டுமானப் பணிகள் துவங்கின. 26.11.1904 இல் செங்கோட்டை புனலூர் ரயில் போக்குவரத்து துவங்கியது. திருவிதாங்கூர் மன்னர்களின் உறவுகளை பராமரித்துக் கொண்டே தனது காலனியாதிக்கச் சுரண்டலை விரிவுபடுத்தும் பிரிட்டிஷ் ‘ராஜதந்திர’ திட்டங்களின் சின்னமாக புனலூர் தொங்கு பாலம் திகழ்கிறது. எனவேதான் திருவிதாங்கூர் மண்ணின் செங்கொடி சகாக்கள் வீரியமான தங்கள் போராட்டங்களை பிரிட்டிஷாருக்கும் சமஸ்தானத்திற்கு எதிராக ஒருசேர நடத்தினர். புனலூர் பாலம் அழகும் ஆச்சரியமும் கலந்த பிரமிக்க வைக்கும் கட்டுமான பொறியியலின் சின்னமாக இன்றும் அனைவரையும் மகிழ்விக்கிறது. புனலூர் தொங்குபாலத்திலிருந்து அன்று மாலை புறப்படும்போது 20ஆம் நூற்றாண்டின் துவக்க காலத்தில் புனலூர் தொழிற்சங்கங்களின் தீரமிக்க சகாக்கள் கல்லடையாற்றின் கரைகளிலும் அடர்ந்த உள் வனங்களிலும் மறைந்திருந்து தங்கள் போராட்டங்களை தொடர்ந்த வரலாற்றுச் சித்திரங்கள் மனக் கண்ணில் தோன்றின.