what-they-told

img

காலத்தை வென்றவர்கள் - தோழர் ஸ்டாலின்

தோழர் ஸ்டாலின்

மனித குல விடுதலைக்கான தீர்வைச் சொன்னது மார்க்சியம். மார்க்சியத்தை ரஷ்ய மண்ணின் தன்மைக்கேற்ப அமல்படுத்தி போல்ஷ்விக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் நடத்திய புரட்சியில் வெற்றி கண்டவர் மாமேதை லெனின். மாபெரும் மக்கள் புரட்சியின் மூலம் உருவான சோஷலிச சோவியத் யூனியனைப் பாதுகாத்தவர் மாவீரன் ஸ்டாலின். லெனின் உருவாக்கிய சோஷலிச சோவியத்துக்கு எதிராக இருந்த ஏகாதிபத்தியவாதிகள், கட்சிக்குள்ளேயே இருந்த துரோகிகள், முதலாளித்துவ முகவர்களின் பலவகைப்பட்ட சந்தர்ப்பவாதங்களுக்கு எதிராகப்போராடி அவற்றையெல்லாம் முறியடித்து சோஷலிசத்தையும் மார்க்சிய லெனினியத்தையும் பாதுகாக்கும் அரணாகவும் அவற்றுக்குச் செயல்வடிவம் கொடுக்கும் சிற்பியாகவும் திகழ்ந்தார் தோழர் ஸ்டாலின்.

சோவியத் ரஷ்யாவில் உலகிலேயே முதலாவதும் மிகப் பெரியதுமான விவசாய கூட்டுப் பண்ணைகளை உருவாக்கியவர் ஸ்டாலின்தான். அதாவது விவசாயி களுக்கு நிலத்தைப் பகிர்ந்தளித்து - அவர்களைக் கூட்டுறவு உற்பத்தியில் ஈடுபடச்செய்து அவ்வுற்பத்திப் பொருட்களை அவ் விவசாயிகளே சந்தைப்படுத்தி விற்பனை செய்வதில் பெறக்கூடிய இலாபத்தை உழைப்புக்கேற்ற ஊதியமாகப் பங்கீடு செய்து கொள்ளச் செய்து-மீதமுள்ள இலாபத்தைச் சமூகத்தின் மற்ற பயன்பாட்டுக்குப் பயன்படுத்திக் கொள்வதுமான வழிமுறைகளால், விவசாயிகள் தற்சார்புடன் திகழ்வதற்கான உற்பத்தி முறையை சோவியத் நாடெங்கும் செயல்படுத்தி வெற்றி கண்டவர் ஸ்டாலின். மேலும், வேலைக்கு உத்தரவாதம்,அனைத்து குடிமக்களுக்கு சமூகப் பொருளாதாரப் பாதுகாப்பு, எழுத்தறிவின்மை முழுநீக்கம் போன்ற பயன்களுடன் கூடிய உலகின் முதல் சோஷலிச அமைப்பு சோவியத் ரஷ்யாவில் ஸ்டாலினால் மேலும் வளர்த்தெடுக்கப்பட்டது.

இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் உலக பாசிச பயங்கரவாதியான ஹிட்லரை எதிர்த்த போராட்டத்தைத் தீரமுடன் வழி நடத்தி வெற்றி கண்டவர் ஸ்டாலின். இவருடைய பெரு முயற்சியாலும் வழிகாட்டுதலாலும்தான் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் விடுதலை பெற்றதோடு சோஷலிச நாடுகளாகவும் மாற்றம் பெற்றன. மேலும் முதலாளித்துவச் சீர்கேடுகளால் சோஷலிச நாடுகள் சீர்குலைவதைத் தவிர்க்கும் வகையில் சோஷலிச நாடுகளோடு முதலாளித்துவ நாடுகள் அண்டுவதைத் தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொண்டவர் ஸ்டாலின்தான். மேலும் சீனா, கியூபா, பொலிவியா,வியட்நாம் கொரியா, கம்போடியா போன்ற நாடுகள் விடுதலை பெறுவதற்கான புரட்சிகரப் போராட்டங்கள் அனைத்திற்கும் பேருதவி புரிந்தது மட்டுமல்லாமல், ஏகாதிபத்தியவாதிகள்- அனைத்துப் பிற்போக்கு அரசியல்வாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் புரட்சியாளர்களுக்கு வழிகாட்டியாய்த் திகழ்ந்து புரட்சிகர வரலாற்றின் முன்னணியில் நின்றவர் ஸ்டாலின்.சுருங்கக் கூறின் உலகின் மூன்றிலொரு பகுதி நாடுகள் சோஷலிச முகாமாக மாறி ஏகாதிபத்திய நாடு களுக்குச் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தவர் ஸ்டாலின்.

பெரணமல்லூர் சேகரன்
 

;