நாடாளுமன்ற கட்டிடத்தை மாற்றுகிறது மோடி அரசு
புதுதில்லி, செப். 13- இந்திய நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டிடத்தை கட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்ற புதிய கட்டிடத்திற்கான மாதிரி வரைபட விண்ணப்பங்களை மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை கோரியுள்ளது. அண்மையில் நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, மாநிலங்களவைத் தலைவர் வெங் கய்யா நாயுடுவும், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவும் நாடாளுமன்றத்தில் ‘இடப்பற்றாக்குறை’ ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி மாநிலங்களவையில் பேசிய வெங்கய்யா நாயுடு, நாடாளு மன்றத்திற்கு புதிய கட்டிடத்தை கட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறினர். இதே போன்று ஆகஸ்ட் 10 அன்று தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்ற எண்ணம் உள்ளது என்றார். புதிய கட்டிடம் கட்டு வது தொடர்பாக அனைத்து தரப்பின ரின் கருத்துகளை அறிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்ற அவர், இப்போது உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தை நவீனப்படுத்தவும் வாய்ப்பு உள்ளது என்றார்.
இந்த நிலையில், நாடாளு மன்றத்துக்கான புதிய கட்டிடத்திற்கான மாதிரி வரைபட விண்ணப்பங்களை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம் கோரியுள்ளது. அந்த அமைச்சகத்தின் இணையதளத்தில் இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்திய நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவது அல்லது இப்போ தைய கட்டிடத்தை நவீனப்படுத்துவது, ஒருங்கிணைந்த அமைச்சகம் அமைப்பது என திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அடுத்த 150 முதல் 200 ஆண்டு களுக்கு நீடித்திருக்கும் வகையில் இவற்றை கட்ட முடிவு எடுத்திருப்ப தாக கூறப்பட்டுள்ளது. இதற்கான வரை படங்களை வருகிற, 23 ஆம் தேதிக்குள் கட்டிடக் கலை நிறுவனங்கள் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த வழிகாட்டு நெறிமுறைகளை நாடாளு மன்ற கட்டிடத்திற்காக அமைக்கப் பட்டுள்ள குழுவிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம் என்றும்கூறப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் இருந்து தலை நகரை புதுதில்லிக்கு பிரிட்டிஷ் அரசு மாற்றியதை தொடர்ந்து நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டது. புதுதில்லியை வடிவமைத்த பிரிட்டிஷ் கால பொறி யாளர்களான எட்வின் லுட்யென்ஸ், ஹேர்பெர்ட் பெக்கர் ஆகியோரே நாடாளுமன்ற கட்டிடத்தையும் வடிவமைத்தனர்.
வட்ட வடிவிலான இந்த கட்டித்தை கட்டும் பணி 1921 ஆம் ஆண்டு தொடங்கி 1927 ஆம் ஆண்டு நிறைவு பெற்றது. அன்றைய கால கட்டத்தில் 83 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட நாடாளுமன்றத்தை அதே ஆண்டு ஜனவரி மாதம் 18-ஆம் தேதி இந்திய தலைமை ஆளுநரான இர்வின் பிரபு திறந்து வைத்தார். அப்போதைய இந்திய மத்திய சட்டமன்ற அவையின் மூன்றாவது அமர்வு ஜனவரி 19-ஆம் தேதி தொடங்கியது.
நாட்டின் 75 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள 2022ம் ஆண்டுக்குள் நாடாளுமன்றத்திற்கான புதிய கட்டிடத்தை கட்டி முடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. நாடாளுமன்ற கட்டிடத்தோடு, அதன் அருகே சுமார் 3 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைத்துள்ள உள்ள பிரதமர், உள்துறை, நிதித் துறை, பாதுகாப்புத் துறை உள்ளிட்ட 30 மத்திய அரசு அமைச்சக அலு வலகங்களையும் ஒரே வளாகத்தில் கொண்டுவரும் வகையிலும், மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. புதிய கட்டிடம் கட்டுவதாக இருந்தால் அது இப்போதைய கட்டிட த்தை போலவே அமைக்கப்படுமா? அல் லது நவீன கட்டிட பாணியில் அமைக்கப் படுமா என்பது குறித்தும் அரசு இறுதி முடிவு எடுக்கவில்லை என்று கூறியுள்ள அதிகாரிகள், ஆனால் வருகிற 2020 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் புதிய கட்டிடத்தில் அல்லது நவீனப்படுத்தப்பட்ட கட்டிடத்தில் நடைபெறும் என்பது உறுதி என்று தெரிவித்துள்ளனர்.