செய்யும் தொழிலில் சீர்தூக்கின் நெய்யும் தொழிலுக்கு நிகரில்லை’’ என்னும் வழக்காறும் உண்டு. ஆம் நாகரீக வாழ்க்கையின் தொடக்கமாக வேளாண்மை அமைந்தது. வேளாண் உற்பத்தியில் நிறைவுகண்டதன் விளைவாக பருத்தியினைக் கொண்டு ஆடை நெய்யக்கற்றுக் கொண்டான் மனிதன். அக்கால மக்கள் தென்னை மரத்தின் பண்ணாடை, சிலந்தியின் வலை, பறவைகளின் கூடுகட்டும் திறம் ஆகியவற்றை உற்றுநோக்கியே நாகரீகக்கால மனிதன் நெசவுக் கலையைக் கற்றிருக்கக் கூடும் எனக் கருத இடமுண்டு. தமிழ்மொழியின் தொன்மை வரலாற்றினை தாங்கி நிற்கும் சங்க இலக்கியங்கள் நெசவுத் தொழிலின் சிறப்பினையும், அதன் முக்கியத்துவத்தையும் எடுத்துக்கூறியுள்ளதன் மூலம் நெசவுத் தொழிலின் மேன்மையை உணர முடிகிறது. ஆடை நெசவுக்கலை 5 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பதை சிந்துச்சமவெளி நாகரீகச் சின்னங்களில் காணப்படும் ஆடைகள் உணர்த்துகின்றன. வனப்பும் மென்மையும் மிகுந்த ஆடைகள் தமிழகத்தில் நெய்யப்பட்டு பயன்பாட்டில் இருந்ததுடன், அவை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன. ஆதிச்சநல்லூரில் கிடைத்த தாழிகளில் மண்வெட்டி, கொழு, நெல், உமி, பழைய இற்றுப்போன பஞ்சாடை ஆகியவை இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. ஆதிச்சநல்லூரில் புதைக்கப்பட்டவர்கள் தாமிரபரணி ஆற்றங்கரையில் நெல், பருத்தி ஆகியவற்றை விவசாயம் செய்தது மட்டுமல்ல நெசவுத் தொழிலும் செய்துவந்தனர் என்று அறிய முடிகிறது. கி.பி. 985ல் தமிழகத்தில் இராசராச சோழன் காலத்தில் பட்டுநெசவு செழிப்புற்று வளர்ந்திருந்தது. தஞ்சைப் பெரிய கோயிலின் கோபுரத்தின் உட்புறத்தில் தீட்டப்பட்டுள்ள ஓவியத்தில் மன்னர் இராசராசன் தன் மனைவியுடன் பட்டாடையில் நடராசரை வழிபடுவதான காட்சி இன்றளவும் காணப்படுவதாகக் கூறப்படுகிறது. உறையூரில் முன்காலத்தில் நெசவுத் தொழிலுக்குச் சாயமிடும் தொட்டி காணப்பட்டதாகவும், உறையூரில் நெசவு செய்யப்பட்ட சேலைகள் ஒரு தேங்காய் மூடியில் அடைக்கக் கூடிய அளவுக்கு மெல்லியதாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.