புதுதில்லி,மார்ச் 5- நாட்டில் கொரோனா வைரஸ் நோய் சந்தேகத்தின் பேரில் 28 ஆயிரத்து 529 பேர் கண்காணிக்கப்பட்டு வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வியாழனன்று நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஹர்ஷ வர்தன் கூறுகையில், நிலைமையை பிரதமர் மோடி நேரடியாக கண்காணிப்பதாகவும் கொரோனா தொற்று அறிகுறியாக இருக்கலாம் என்ற சந்தே கத்தின் பேரில் பெங்களூரு ராஜீவ் காந்தி நெஞ்சக நோய் மருத்துவ கழகத்தில் 5 பேர் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வக சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதனிடையே ஐதராபாத் மற்றும் தெலுங்கானாவின் வேறு சில பகுதிகளில் 20 பேருக்கு அறிகுறிகள் இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக மாநில சுகாதார அமைச்சர் ராஜேந்திரா தெரிவித்துள்ளார். தில்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் 25 பேரும், ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் 4 பேரும் தனி வார்டுகளில் தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர் என்று தெரிவித்தார்.