what-they-told

img

அக்டோபர் இறுதியில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை வெளியிடப்படும்

புதுதில்லி, ஜூலை 17- அக்டோபர் மாத இறுதி வாரத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை வெளியிடப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உறுதியளித்தது. இதனையேற்று உச்சநீதிமன்றம் வழக்கை முடித்து வைத்துள்ளது.  தமிழ்நாட்டில் 2016ஆம் ஆண்டு நடத்தப்பட்டிருக்க வேண்டிய உள்ளாட்சி தேர்தல் ஆளுங்கட்சியின் இழுத்தடிப்பால்  இதுவரை நடத்தப்படவில்லை என்று எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வந்தனர்.  உள்ளாட்சித் தேர்தலை நடத்தக்கோரி  திமுக மற்றும் பொதுநல அமைப்புகள், உச்சநீதிமன்றத்தில், வழக்குத் தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 3 மாதத்தில், உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் அந்த காலக்கெடுவுக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை.

மேலும்  கூடுதல் கால அவகாசம் கோரியது. மக்களவை தேர்தல் முடிந்த பிறகு, உள்ளாட்சி தேர்தலுக்கான  முதற்கட்டமாக, வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்கான விதிமுறை வெளியிடப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலை நடத்தக் கோரும் வழக்கின் விசாரணை, திங்களன்று முன்தினம், உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் சார்பில், பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், உள்ளாட்சி தேர்தலை நடத்த அக்டோபர் 31ஆம் தேதி வரை கால அவகாசம் வேண்டும் எனக் கோரப்பட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட, மனு, உச்சநீதிமன்றத்தில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வில்  புதனன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை வெளியிடப்படும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உறுதியளித்தது. இதனை ஏற்ற நீதிபதிகள், உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கை முடித்து வைத்து உத்தரவிடப்பட்டது.