மனிதர்களில் இலக்கை அடைந்தவர்கள், தோல்வியை தழுவியவர்கள், அதை அங்கீகரித்து வாழ்வை நகர்த்தியவர்கள், ஏதோ ஒரு காரணத்தினால் துவக்கத்தில் தாங்கள் நினைத்ததை அடைய முடியாத போதும் வேறொரு கட்டத்தில் தங்களின் எண்ணங்களை சாதித்தவர்கள், தோல்வியை ஏற்க மனமின்றி ஏதோ ஒரு தருணத்தில் தங்களைத் தாங்களே மாய்த்துக் கொண்டவர்கள்! என பல வகையினர் இருப்பதைக் காண்கிறோம். இதுபோன்ற அனுபவங்களுக்கும் அரசாங்கத்தின் செயல்களுக்கும் இருந்த இணைப்பை சிந்திக்க முடிந்தால் இளையதலைமுறை தற்போது சந்தித்து வரும் பிரச்சனைகளைப் புரிந்து கொள்ள முடியும். ‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ எனும் அரசமைப்பு சட்டம் உருவாகும் முன்பு கல்வி வெளிப்படையாக சாதி அடிப்படையில் சிலருக்கு உறுதிப்படுத்தப்பட்டது. பெரும்பாலோருக்கு மறுக்கப்பட்டது. நமது அரசமைப்பு சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அண்ணல் அம்பேத்கரே இதனை எதிர்கொண்டு தான் சாதனையாளராக மாறினார். நிலவுடமை அமைப்பின் உச்சமான மன்னராட்சி காலம் முடிந்து நாடு குடியரசாக ஆன பின்னரும் கூட சிலரிடம் நிலக்குவியலும் பெரும்பாலான மக்களிடம் நிலமே இல்லாத நிலையும் நீடித்து வருகிறது. ஆனாலும் சில மாநிலங்களில் ஓரளவு நிலச்சீர்திருத்தம் செய்யப்பட்டது. தமிழகத்திலும் கூட தீண்டாமையின் உயிர் குடிக்கும் கோர வடிவங்களில் சிலவற்றுக்கு முற்றுப்புள்ளியும், பண்ணையடிமை முறைகள் முடிவுக்கும் வந்தது. சமூகநீதி கருத்தாக்கங்கள் கொண்ட திராவிட கட்சிகளின் ஆட்சி வந்ததால் தமிழகத்தில் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு முறை அமலுக்கு வந்தது. அரசு நலத் திட்டங்கள் அமலாகின. பெண்கள் வாழ்விலும் நம்பிக்கை தரும் வகையில் குடும்ப சொத்தில் பெண்களுக்கு பங்கு என்பது சட்டமாகி நடைமுறைக்கு வந்தன . ஆனால் சமீப காலமாக அரசின் நீர் மேலாண்மையின் தோல்வி, காவிரி பிரச்சனை, டெல்டா பகுதிகளில் அமலாக்கத் துடிக்கும் விவசாய அழிப்பு திட்டங்கள், புயலின் கோரத் தாண்டவம் போன்ற பல பிரச்சனைகளால் பலரும் தற்கொலைப் பாதையை நோக்கி செல்வதாக வரும் கசப்பான தகவல்களை தமிழகம் கேட்டு வருகிறது. இதிலிருந்து மீள அனைவரும் இணைந்து செயல்பட வேண்டியுள்ளது. ஆனால் அரசின் நடவடிக்கை மக்களின் உணர்வுகள் ஒன்றுசேர இயலாத வகையில் மிக நுட்பமாக செயல்படுகிறது. குறிப்பாக போராடும் மக்கள் மீது கடும் அடக்குமுறையை ஏவுகிறது.செயல்பாட்டாளர்களை குறிவைத்து நசுக்கிறது. அச்சம் நிறைந்த சூழலை உருவாக்குகிறது. இந்த சூழலில் எதிர்கால நம்பிக்கையான மாணவ சமூகமும் பல வகைகளில் குறிவைத்து வஞ்சிக்கப்படுகிறது.
கேள்வி எழுப்பத் தெரியாத பிள்ளைப் பூச்சிகளாக்கும் பள்ளி நடைமுறைகள் ஒருபுறம்! மறுபுறம் நீட் தேர்வு முறை, மும்மொழித் திட்டம், மாநில பட்டியலில் கல்வி இல்லாத சூழல், கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு குறைப்பு, அரசுப் பள்ளி அடிப்படை கட்டமைப்பில் அலட்சியம் காட்டுவது, தனியார் துறை ஊக்குவிப்பு, தனியார் துறையில் இடஒதுக்கீடு இல்லாததை கண்டு கொள்ளாத போக்கு போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மூலம் இளம் தலைமுறைகளை மனச்சோர்விற்கு தள்ளுகிறது. இதில் மறைமுக அம்சமாக பழங்காலம் போல முன்னேறிய வகுப்பினருக்கு மட்டுமே உயர்கல்வி என்பதை உத்தரவாதப்படுத்தி மற்றவர்களின் கல்வி வாய்ப்பை மறுக்கிறது. இது மாணவர்களை தற்கொலைப் பாதையை நாட ஊக்குவிக்கிறது . அனிதாவின் மரணத்தில் துவங்கியது. இந்த ஆண்டு மட்டும் இதுவரை நான்கு பேர் தற்கொலை என்பதிலிருந்து இதன் தீவிரத்தை உணரலாம். இன்னொருபுறம் ஆளும் கட்சிகள் அரசின் மறைமுக உதவியுடன் இடைநிலை சாதி மக்களின் ஆழ்மனதில் புதைந்து கிடக்கும் சுயசாதி பெருமித உணர்விற்கு புது ரத்தம் பாய்ச்சுகின்றன. பெரியவர்கள் மத்தியில் வெளிப்படையாக ஆங்காங்கு ஆணவக் கொலைகளுக்கு வழிவகுப்பதையும் அவைகளை அரசு ஆணவக் கொலை என அங்கீகரிக்காமல் கடப்பதையும் கவனித்தால் உணரலாம்.
பள்ளிக் குழந்தைகள் மத்தியில் சொந்தசாதி பெருமித உணர்வை பதிய வைத்து பட்டியலின சாதிக் குழந்தைகளிடம் தீண்டாமை கடைப்பிடிப்பதை வலுப்படுத்தி சாதி அமைப்பை கெட்டிப் படுத்துவதிலும் ஆளும் அரசுகள் மறைமுகமாக தீவிர முனைப்புக் காட்டுகின்றன. சமீபகாலமாக பல அரசுப் பள்ளிகளில் சத்துணவுக் கூடங்களில் உணவு சமைக்க நியமிக்கப்படும் பட்டியலின சாதி ஊழியர்களின் உழைப்பை அந்தக் குழந்தைகள் புறக்கணிக்க முடிவெடுப்பதும் அதற்கு அந்த பள்ளிகளில் பணி புரியும் தலைமையாசிரியர் முதல் ஊர்மக்கள் வரை உறுதுணையாக நின்று அழுத்தம் தருவதும் போர்க்குரல் எழுப்புவதும் முன்னுக்கு வந்துள்ளன. திருப்பூர் மாவட்டத்தின் ஒரு பள்ளியில் வெளிப்பட்ட இந்த அனுபவம் மிகச் சமீபத்தில் மதுரை மாவட்டத்தின் ஒரு பள்ளியில் வெளிப்பட்டதன் மூலம் இந்தப் பிரச்சனை தொடர்கதையாகிக் கொண்டிருப்பதை உணரலாம். பொதுவாக பள்ளிகளில் குழந்தைகள் விளையாடுவதன் மூலம் அவர்களுக்குள் பேதம் மறைந்து, ஒற்றுமைக்கு உதவும் என்பர். ஆனால் சமீபத்தில் முகநூலில் சிலரது அனுபவ பதிவுகளைக் காண நேர்ந்தது. அவைகளில் வாசிப்போர் மனதில் கவலையை உருவாக்கும் விதத்திலான துவக்க நிலை அரசுப் பள்ளி ஒன்றின் அனுபவம் இருந்தது. குழந்தைகள் விளையாடும் போது கூட பிற சாதி (குறிப்பாக பட்டியலின சகமாணவர்கள்) குழந்தைகள் தங்களை தொடாத வண்ணம் எச்சரிக்கையாய் விளையாடும் அளவு தீண்டாமையை எவ்வளவு தீவிரமாக கடைபிடித்தார்கள் எனும் அனுபவ பகிர்வது.வாசித்ததும் அது உருவாக்கிய அதிர்ச்சி மிகப் பெரியது. எவ்வளவு தீவிரமாக சிந்திக்கப்பட வேண்டிய விசயமிது!!
கியூபா போன்ற நாடுகளின் மருத்துவத் துறை உலகமே வியக்கும் வண்ணம் இருப்பதும் உலகிற்கே உதவுவதாக இருப்பதையும், பின்லாந்தின் கல்விமுறை அனைத்து நாடுகளையும் சிந்திக்க வைப்பதாய் இருப்பதைக் காண்கிறோம். ஆனால் பல வகைகளிலும் தொழில்நுட்ப முன்னேற்றம் கண்டு வரும் நமது நாட்டில் முக்கியமான மருத்துவக் கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் கூட சமீப காலமாக சாதி அடிப்படையிலான ஒதுக்குதல்கள் நீடிப்பதை அந்த மாணவர்களின் தற்கொலைகள் மூலம் அறிகிறோம். நமது நாட்டின் இந்த பிற்போக்கான நிலை குறித்து சிந்திக்க வேண்டிய அவசியம் உள்ளது. அதிலும் சாதியை மையப்படுத்தி நமது குழந்தைகளை வாழ்வில் தோற்கடிக்க முனையும் அரசு செயல்பாட்டின் அபாயத்தைக் குறித்து தீவிரமாக சிந்திக்கவும் எதிர்வினையாற்றவும் தேவை உள்ளது. 1. பள்ளிக்கட்டணம் செலுத்த முடியாததால் குடும்பமே தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் பெற்றோர்கள். 2.வருடம் முழுவதும் உழைப்பை கொட்டி கற்றுத்தந்து அதன் பலனாக சிறப்பான மதிப்பெண் பெற்ற பிள்ளைகளை சாதியாய் தேர்வு செய்யும் வன்மத்துடன் நீட் திணித்து வாழ்வில் தோற்கடிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள். 3.சுயசிந்தனைக்கு வித்திடாத இன்றைய கல்வி முறையால் அரசின் தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாமல் உயிர்ப்பலி தந்து கொண்டிருக்கும் மாணவ சமுதாயம் என இந்த மூன்று புள்ளிகளும் ஒருமித்து மாற்று சிந்தனைக்கு வித்திட வேண்டும்! இந்த திசையில் பயணிக்கும் போதுதான் பள்ளிக் குழந்தைகள் மனதில் கூட நஞ்சை விதைக்கும் பழங்கால நடைமுறைக்கு திரும்ப மாட்டோம்! தோல்வியை ஏற்க மாட்டோம்! மண்டல் கமிசன் சமயத்தில் சமூக நீதிக்கு எதிராக வடக்கில் ஊன்றப்பட்ட விஷ வித்துகள் போல் தமிழக மண்ணில் சமூகநீதியை அழிக்கும் விஷ வித்தை ஊன்ற அனுமதிக்க மாட்டோம்! என ஓங்கி முழங்கினால் தான் தீர்வை நோக்கி நகர முடியும்! அதற்கான வழிமுறைகளைப் பற்றி சிந்திப்பதே இன்றைய அவசர அவசிய தேவை!