what-they-told

img

இந்நாள் மார்ச் 16 இதற்கு முன்னால்

1898 - ஆஸ்திரேலியாவிலிருந்த இங்கிலாந்தின் குடியேற்றங்கள், ஆஸ்திரேலிய காமன்வெல்த் என்ற கூட்டரசுக்குப் பின்னாளில் அடிப்படையாக அமைந்த அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கின. அமெரிக்காவிலிருந்த குடியேற்றங்களை 1783இல் இங்கிலாந்து இழந்தபின், குற்றவாளிகளை 1788இலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பத் தொடங்கியது. அங்கு உருவாக்கப்பட்ட ஆறு பெரிய குடியேற்றங்களுடன், நியூசிலாந்துக் குடியேற்றத்திலும் இருந்தவர்களில் பெரும்பான்மையோர், அந்த மண்ணில் பிறந்தவர்களாக ஆகியிருந்தனர். அதாவது, 90 சதவீதத்துக்கு மேற்பட்டோர், ஆங்கிலேய, ஐரிய பின்னணி கொண்டவர்களாக இருந்தாலும், பிறந்த மண் ஆஸ்திரேலியாவாகியிருந்ததால், அவர்களிடையே தங்கள் சொந்த நாடு என்ற எண்ணம் உருவாகத் தொடங்கியிருந்தது. தொடக்கத்தில் இந்தக் குடியேற்றங்களிடையே முரண்பாடுகள் நிலவி, ஒற்றுமையற்ற நிலை இருந்தாலும், 1877இல் நிறுவப்பட்ட கம்பியில்லாத் தந்தியால் ஏற்பட்ட தகவல் தொடர்புகள், எதிரிகள் என்ற நிலையை மாற்றின. தொழில் வளர்ச்சி என்பது, மூலப் பொருட்களையும், உற்பத்திப் பொருட்களையும் பிற பகுதிகளுக்கு எடுத்துச் செல்லவேண்டிய கட்டாயத்தை உருவாக்கவே செய்யும் என்பதால், குடியேற்றங்களுக்கிடையே ரயில் பாதைகள் உள்ளிட்ட போக்குவரத்து வசதிகளும் உருவானது, மேலும் ஒற்றுமைக்கு வழிவகுத்தது. அனைத்துக் குடியேற்றங்களும் இணைந்த ஓர் இராணுவத்தை உருவாக்கிக்கொள்ளுமாறு இங்கிலாந்தும் வழிகாட்டிய நிலையில், அமெரிக்கா விடுதலை பெற்றபோது இருந்ததற்கு இணையான மக்கள்தொகையுடன் ஆஸ்திரேலியா இருப்பதாகவும், அமெரிக்கா போர்மூலம் செய்ததை, அமைதியான முறையில், தாய்நாட்டுடனான உறவை முறித்துக்கொள்ளாமல் ஆஸ்திரேலியாவில் செய்யலாம் என்றும் நியூசவுத்வேல்ஸ் குடியேற்றத்தின் தலைவர் ஹென்றி பார்க்ஸ், 1889இல் ஆற்றிய உரை திருப்புமுனையாக அமைந்தது. 1890இல் தொடங்கி, பல அரசமைப்பு மாநாடுகள், ஒவ்வொரு குடியேற்றத்திலும் வாக்கெடுப்புகள் என்று பல கட்ட முயற்சிகளுக்குப்பின், 1898இல் இங்கிலாந்தின் மேலாதிக்கத்திற்குக் கட்டுப்பட்ட ஒரு கூட்டமைப்பு அரசாக ஆஸ்திரேலிய காமன்வெல்த் உருவாக்கப்படுவதாக இந்த அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. இதையும்கூட நியூசவுத்வேல்ஸ் நிராகரிக்க, மாற்றங்கள், இங்கிலாந்தின் ஒப்புதல் ஆகியவற்றுடன், 1901இல் ஆஸ்திரேலிய காமன்வெல்த் நடைமுறைக்கு வந்தது. கூட்டமைப்பு என்பதில் முதல் 20 ஆண்டுகள் உறுதியாக இருந்தாலும், பின்னர் மாறத்தொடங்கி, பொருளாதாரப் பெருமந்தத்திற்குப்பின் வருமான வரியை கூட்டரசு மட்டுமே விதிக்க முடியும் என்ற திருத்தத்திற்குப்பின், மாநிலங்களின் அதிகாரம் சுருங்கிப் போனது. இன்றும்கூட, பல அதிகாரங்கள் கூட்டரசுக்கு இல்லாவிட்டாலும்கூட, மையப்படுத்தப்பட்ட அதிகாரம்கொண்ட நாடாகத்தான் ஆஸ்திரேலியா இயங்குகிறது.