ஆட்டோ ஓட்டுநரின் அசத்தல் அறிவிப்பு
இந்திய நாட்டின் பொழுதுபோக்குத் துறையில் முன்னணியாக இருப்பது கிரிக்கெட்டும், சினிமாவும் தான். கட் - அவுட், பாலாபிஷேகம் என சினிமாத்துறை ரசிகர்கள் அதிக செலவில் கொண்டாடினாலும், விளையாட்டுத் துறை ரசிகர்கள் கிரிக்கெட்டிற்காக அவர்களையும் மிஞ்சத் தயாராக இருப்பார்கள் போல் தெரிகிறது. தற்போது இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் 12-வது சீசன் உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சண்டிகர் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த அனில்குமார் என்ற ஆட்டோ ஓட்டுநர், “இந்திய அணி உலகக்கோப்பையை வென்றால், 10 நாட்களுக்கு தமது ஆட்டோவில் இலவசமாகப் பயண சேவை வழங்கப்படும்” என தனது ஆட்டோவில் விளம்பரம் செய்துள்ளார். மோடி பிரதமர் பதவி ஏற்றதிலிருந்து பெட்ரோல், டீசல் விலை ரன் ரேட்டைப் போலத் தாறுமாறாக எகிறி வருகிறது. குடும்ப பட்ஜெட், அன்றாட செலவுகளைப் பற்றி கண்டுகொள்ளாமல் இந்திய கிரிக்கெட் அணியின் மீதான காதலால் இலவச பயணம் அறிவித்துள்ள அனில்குமாரை கிரிக்கெட் ரசிகர்கள், ஆன்லைன் ஆர்மிகள் பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.