what-they-told

img

சென்னையில் காற்று மாசு சற்று குறைந்தது

சென்னை,நவ.9- சென்னையில் காற்று மாசு சற்று குறைந்துள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.  காற்று மாசுபாட்டால் தில்லி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சென்னையிலும் காற்று மாசு காரணமாக கடந்த சில தினங்களாக பனி படர்ந்த புகை போன்ற காட்சி பகல் நேரங்களிலும் தென்பட்டது. வழக்கமாக வடகிழக்குப் பருவமழைக் காலங்களில் வடகிழக்கு மற்றும் கிழக்கில் இருந்து காற்று வீசும். ஆனால் மகா புயல் காரணமாக அந்த திசைகளில் இருந்து காற்று வீசாமல் இருந்ததால் சென்னையில் காற்றில் மாசு அதிகரித்தது. சனிக்கிழமையன்று முதல் வழக்கம்போல் காற்று வீச தொடங்கி இருப்பதால் காற்றில் ஈரப்பதம் குறைந்து தட்பவெப்பநிலை மாறத் தொடங்கியுள்ளது. வானிலை மாற்றத்தால் தரைப்பகுதிகளில் நிலவும் காற்று மாசு மேல் எழும்பி செல்லும் என்பதால் படிப்படியாக காற்றில் மாசு குறைந்து பனிப்படர்ந்த புகை போன்ற காட்சி விலகும் என வானிலை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். மத்திய, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் சென்னையில் மணலி மற்றும் மணலி கிராமம், வேளச்சேரி, ஆலந்தூர் ஆகிய 4 இடங்களில் காற்றின் தரம் அளவிடப்பட்டு வருகிறது. தற்போது மத்திய மாசுகட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள காற்று தர அட்டவணை பட்டியலில் காற்றில் நுண்துகள்களின் அளவு 289-ல் இருந்து  சனிக்கிழமையன்று 218 ஆக குறைந்து பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.