what-they-told

img

கீழடியில் தொடரும் ஆய்வு

ஆச்சரியமூட்டும் நீண்ட சுவர் நெசவு செய்ய எலும்புமுனை

சிந்து,கங்கை நதிக்கரை நாகரீகத்திற்கு பின்,இரண்டாம் நிலை நகர நாகரீகங்கள் தமிழகத்தில் தோன்றவில்லை என்ற கருத்துக்கு மாறாய் சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய வைகை கரை நாகரீகம் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் கீழடி அகழாய்வில் கிடைத்துள்ளன. வைகை நதியின் தென்கரையில் மதுரையிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க கீழடி கிராமம் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது. தமிழகத்தில் அமைந்துள்ள அகழாய்வுகளிலேயே இதுதான் மிகப்பெரிய அளவில் நடைபெற்றுவரும் அகழாய்வாகும். கீழடியில் தற்போது ஐந்தாம் கட்ட ஆய்வு நடைபெற்றுவருகிறது. கடந்த ஜூன் மாதம் 13-ஆம் தேதி தொடங்கிய ஆய்வு செப்,31-ஆம் தேதியோடு நிறைவு பெறுகிறது. ஆறாம் கட்ட ஆய்வு ஜனவரியில் தொடங்கும் எனக் கூறப்படுகிறது.

ஐந்தாம் கட்ட ஆய்வில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குழிகள் தோண்டுவது, அதில் கிடைக்கும் பொருட்களை சேகரித்து வகைப்படுத்துவது போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.300 முதல் ரூ.360 வரை ஊதியமாக வழங்கப்படுகிறது. சுமார் நான்கு ஏக்கர் பரப்பளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த ஆய்விற்காக ரூ.47 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தவிர கல்லூரி மாணவர்கள், ஆய்வு மாணவர்களும் களப்பணியில் உள்ளனர். இந்தப் பணிகளை மேற்பார்வையிட்டு கிடைத்த பொருட்களை ஆவணப்படுத்துதல் மற்றும் ஆலோசனைகள் வழங்குவதற்கு காப்பாளர் உள் ளார். ஐந்தாம் கட்ட ஆய்வில் முதன் முதலாக (அறிவியல் தொழில் நுட்பம்) புவி காந்த புவிஈர்ப்பு விசையை அளவிடும் கருவி, ஜிபிஆர் (GPR-Ground penetrating rader) மண்ணிற்குள் கேபிள் மூலம் ஆய்வு செய்யும் கருவி ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளன.

நான்காம் கட்ட ஆய்வில் 5,820 பொருட்கள் கிடைத்திருந்த நிலையில் ஐந்தாம் கட்ட ஆய்வில் இதுவரை சுமார் 650 பொருட்கள் கிடைத்துள்ளன. இதுவரை நடந்து முடிந்துள்ள நான்கு கட்ட ஆய்வில் பல்வேறு பொருட்கள், அரிய தகவல்கள் கிடைக்கப்பெற்றிருந்தாலும் ஐந்தாம் கட்ட ஆய்வுதான் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. குறிப்பாக கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே கட்டடங்கள் இருந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தவிர வாய்க்கால்கள், நீண்ட சுவர்கள் இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.

2,500 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வாழ்ந்தவர்கள் கைநெசவுத் தொழிலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற அரிய தகவலும் கிடைத்துள்ளது, இதற்கு ஆதாரமாக எலும்பு முனையுடன் (Bone Point) கூடிய ஒரு பொருள் கிடைத்துள்ளது. இது நூல் சிக்கலின்றி செல்வதற்கு ஏதுவாக வடிவமைக்கப்பட்டிருக்கலாம் (எலும்பு முனையை எழுத்தாணி எனக் கூறுவது தவறான தகவல் என்கிறது ஆய்வு வட்டாரம்). மனித உருவம், காளை உருவம் கொண்ட பலவகை உருவ அமைதிகள் கிடைத்துள்ளன. இவை சுடுமண்ணால் செய்யப்பட்டுள்ளது.  மனித உருவம் கொண்ட சுடுமண் சிற்பத்தை சிலர் அது புத்தர் உருவம் போல் உள்ளது என கூறுவது எழுத்தாளனின் கற்பனை வளம் தானே தவிர வேறொன்றுமில்லை என்கிறது ஆய்வு வட்டாரம். 

அரிய வகையிலான சூது பவளம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதில் பன்றி உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இதை அன்றைக்கு வாழ்ந்தவர்கள் வளையமாக செய்து காதில் அணிந்திருக்கலாம்.  மண்ணால் செய்யப்பட்ட குடுவை ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளது.

கட்டடக்கலையைப் பொறுத்தமட்டில் கீழ்தளம், மேல்தளங்கள் இருந்தன என்பதற்கான ஆதாரப்பூர்வமான, அறிவியல் பூர்வமான சான்றுகள் கிடைக்கப்பெறவில்லை. ஒரு சில இடங்களில் குறிப்பிட்ட தூரத்திற்கு நீண்ட சுவர் இருக்கிறது. அது எங்கு நிறைவு பெறுகிறது என்பது கண்டறியப்படவில்லை. இங்கு தண்ணீர் சென்றிருக்கக்கூடும் என கருதப்படும் வாய்க்கால் ஒன்று ஓரிரு தினங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை நடைபெற்றுள்ள ஆய்வில் மத அடையாளம் சார்ந்தோ, சமயம் சார்ந்தோ எந்த ஒரு பொருளும் கண்டறியப்படவில்லை.

மத்திய அரசின் தொல்லியல்துறை, கீழடியில் கட்டடங்கள் இருப்பதற்கான வாய்ப்பில்லை என ஆய்வையே ஊற்றிமூட நினைத்தது. ஆனால், தமிழக அரசு ஆய்வு மேற்கொண்டு கட்டடங்கள் இருக்கின்றன என்பதை ஐந்தாம்கட்ட ஆய்வின் மூலம் நிரூபித்துள்ளது. ஆறாம்கட்ட ஆய்வில் கட்டடங்களின் அமைப்புகள்  கூடுதலாக கிடைக்கப்பெறலாம் என்கின்றனர் விஷயமறிந்தவர்கள்.

படங்கள்:ஜெ.பொன்மாறன்