what-they-told

img

மனிதனுக்குத் தான் கொரோனா; மக்காச் சோளத்திற்குமா?

விருதுநகர், மார்ச் 10- விருதுநகர் மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான டன் மக்காச் சோளம் விலை வீழ்ச்சியால் விற்பனையாகாமல் விவசாயிகளின் வீடுகளில் தேங்கி உள்ளது.  தமிழக அரசு உடனடியாக விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் நடப்பாண்டில் சுமார் 70 ஆயிரம் ஏக்கரில் மக்காச் சோளம் பயிரிடப்பட்டது. ஏக்கர் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் முதல் 22 ஆயிரம் வரை  செலவு செய்து விவசாயிகள் மக்காச் சோளம் பயிரிட்டிருந்தனர். விளைச்சல் முடிந்து அறுவடை நடைபெற்றுள்ள நிலையில் ஒரு குவிண்டாலுக்கு ரூ.1400 மட்டுமே வழங்கப்படும் என தனியார் வியாபாரிகள் கூறுகின்றனர். இதனால், நஷ்டத் திற்கு விளைய வைத்த மக்காச் சோளத்தை விற்க மன மின்றி விவசாயிகள் வீடுகளில் தேக்கி வைத்துள்ளனர்.   இதுகுறித்து விவசாயிகள் சங்கத்தின் மூர்த்தி கூறுகை யில், கடந்த மாதம் ரூ.2,050 வரை விற்பனையானது மக்காச் சோளம். 15 நாட்களுக்கு முன்பு  ரூ.1650க்கு விற்றது,  தற்போது ரூ.1,400க்கு வியாபாரிகள் கேட்கின்றனர்.

வியாபாரிகளிடம் ஏன் விலை குறைந்துள்ளது என கேட்டால், கொரோனா வைரஸ் பாதிப்பே காரணம்  என்கின்ற னர். விவசாயிகள் மக்காச்சோளத்தை வீடுகள், களங்களில் பராமரிக்க முடியாமல் தேக்கி வைத்துள்ளனர் என்றார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செய லாளர் வி.முருகன் கூறுகையில், கடந்தாண்டு, மக்காச் சோளப் பயிர்களை அமெரிக்கப் படைப்புழு கடுமையாக தாக்கியது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்த னர். பலகட்ட போராட்டத்திற்கு பின்பு, குறைவான   இழப்பீட்டுத் தொகையை தமிழக அரசு வழங்கியது. தற்போது, கொரோனா வைரஸ் பிரச்சனையைக் கார ணம் காட்டி விவசாயிகளிடம் மக்காச்சோளத்தை அடி மாட்டு விலைக்கு தனியார் வியாபாரிகள் கேட்பது கொடு மையானது. தமிழக அரசும், மாவட்ட ஆட்சியரும், இப்பிரச்சனையில்  தலையிட்டு, விவசாயிகளிடம் மக்காச் சோளத்தை கட்டுபடியான விலைக்கு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.