சிம் காா்டு மூலமாக நிகழ்த்தப்படும் மோசடிகளை தடுக்கும் நோக்கில் அவற்றை விற்பனை செய்யும் முகவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சிம் காா்டு தொடர்பான மோசடிகளைத் தடுக்கும் நோக்கில் 52 லட்சம் இணைப்புகளை மத்திய அரசு துண்டித்துள்ளது. மேலும், சுமார் 67,000 முகவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் முதல் மோசடி குற்றச்சாட்டுகளுக்காக முகவர்கள் மீது 300 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சிம் காா்டு சார்ந்த மோசடிகளைத் தடுக்கும் நோக்கில், அவற்றை விற்பனை செய்வதற்கான உரிமத்தை முகவர்களுக்கு வழங்கும் முன், அவர்களது விவரங்களைக் காவல் துறையினர் ஆய்வு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், உரிமங்களை வழங்கும் மையம் அல்லது சிம் காா்டு நிறுவனங்கள் முகவர்களது விவரங்களைத் தனியாக ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதிக எண்ணிக்கையிலான சிம் காா்டுகளை ஒரே நபருக்கு விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்படுகிறது. அதற்குப் பதிலாக ‘பிசினஸ் இணைப்பு’ என்ற புதிய வழியின் கீழ் பல சிம் காா்டுகளை விற்பனை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறும் முகவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
நாட்டில் தற்போது சுமார் 10 லட்சம் சிம் காா்டு முகவர்கள் உள்ளனர். அவர்களது விவரங்களை ஆய்வு செய்வதற்கு உரிய அவகாசம் வழங்கப்படும். புதிய விதிமுறைகள் வரும் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும். அவற்றை நடைமுறைப்படுத்த முகவர்களுக்கு 6 மாதம் அவகாசமும் வழங்கப்படும் என்று ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தில்லியில் செய்தியாளர்களிடம் கூறினார்.