செங்கல்பட்டு, மார்ச் 7- செங்கல்பட்டு மாவட்டம், பொன்விளைந்தகளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஷ்குமார். இவரது மனைவி ராஜேஸ்வரி (27). இவர் தனது மகள் சுபாஷினி (10), மைத்துனர் மகள் தேவர்சினி (6). இவர்கள் மூவரும் பொன்விளைந்த களத்தூர் ஏரியில் சனிக்கிழமையன்று காலை துணி துவைப்பதற்காக சென்றனர். அப்போது, ஏரியிலிருந்த பாறை வழுக்கியதில் சுபாஷினி, தேவர்சினி ஆகி யோர் தண்ணீரில் விழுந்தனர். இவர்களை காப்பாற்ற ராஜேஸ்வரி ஏரியில் இறங்கி யுள்ளார். இதில் 3 பேரும் தண்ணீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். துணி துவைக்கச் சென்ற 3 பேரும் நீண்ட நேரம் வீட்டுக்கு வராததால் உறவினர்கள் ஏரிக்குச் சென்று பார்த்துள்ளனர். அங்கு யாரும் இல்லாத நிலையில் துணிகள் மட்டும் இருந்ததைப் பார்த்து சந்தேகப்பட்டு ஏரியில் இறங்கித் தேடினர். அப்போது 3 பேரும் தண்ணீரில் மூழ்கியது தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து 3 பேரின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பலியான ராஜேஸ்வரியின் கணவர் மகேஷ்குமார் கடந்த ஆண்டு உடல் நிலை சரியில்லாமல் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.