tamilnadu

img

காஷ்மீரை சூறையாடும் சட்டங்களை எதிர்த்து ஸ்ரீநகரில் போராட்டம்...

ஸ்ரீநகர்
ஜம்மு-காஷ்மீரை சூறையாடுவதற்காக மத்திய பாஜக அரசு, இந்த மாநிலத்திற்கான 26 மாநில சட்டங்களை ரத்து செய்ததையும்  புதிய சட்டங்களை அமல்படுத்துவதையும் கண்டித்து  ஸ்ரீநகரில் போராட்டம் நடைபெற்றது.ஜம்மு- காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, அந்த மாநிலத்தை இரண்டாக பிரித்து சிதைத்தது மத்திய பாஜக அரசு.

இதற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அரசியல் கட்சித் தலைவர்கள் பல மாதங்களாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தனர். தொடர் போராட்டத்திற்கு பின்னர்தான் தற்போது சில தலைவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மத்திய பாஜக அரசின் புதிய சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் ஜனநாயக கட்சியினர் (பிடிபி) வியாழனன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்ரீநகர் ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ் அருகே போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.இதுகுறித்து பிடிபி தலைவர் மெஹ்பூபா முப்தி கூறுகையில், ‘ஜம்மு காஷ்மீரை சூறையாடுவதற்காக பாஜக அரசு நிறைவேற்றியுள்ள புதிய நிலச் சட்டத்தை எதிர்த்து பிடிபிகட்சியினர் அமைதியாக போராட்டம் நடத்திவருகின்றனர். சிவில் சமூகமோ அரசியல்வாதிகளோ இங்கு எதுவும் பேச முடியாது. முழு ஜம்மு காஷ்மீரும் சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.