ரயில் மோதி 2 தொழிலாளர்கள் பலி
வேலூர், ஜூலை 17- வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே திருவாலங்காடு ரயில்வே கேட் மூடப்பட்டிருந்தது. அங்கு மோட்டர் பைக்கில் வந்த இருவர், ரயில்வே கேட்டில் நுழைய முயன்றபோது, பைக் பழுதாகி தண்டவாளத்தில் நின்று விட்டது. அப்போது, பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்த டபுள் டெக்கர் எக்ஸ்பிரஸ் ரயில் பைக் மீது மோதியது. இதில் ரயிலில் அடிபட்டு இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானர்கள். விபத்து நடந்த இடம், அரக்கோணம் ரயில்வே காவல் துறை எல்லைக்குட்பட்டதா அல்லது திருவள்ளூர் ரயில்வே காவல் துறை எல்லைக்குட்பட்டதா என்ற சர்சை எழுந்தது. நீண்ட நேரத்திற்கு பின்னர், விபத்து நடந்த இடம், அரக்கோணம் ரயில்வே காவல் துறை எல்லைக்குட்பட்டது எனத் தெரிய வந்தது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இரண்டு சடலங்களையும் மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்தவர்கள் திருவள்ளூர் மாவட்டம் தழையனூரைச் சேர்ந்த ஜெகன்நாதன், (34), சென்னை ஆவடியை சேர்ந்த சரவணன், (25) என்பது தெரிய வந்தது.
தேர்தல் செலவின பார்வையாளர் நியமனம்
வேலூர், ஜூலை 17- வேலூர் மக்களவைத் தேர்தலில் வேட்பாளர்களின் செலவினத்தை கண்காணிக்க சிறப்பு பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் தொடர்பான செலவினங்களை கண்காணிப்பதற்காக, ஓய்வு பெற்ற இந்திய வருவாய்ப் பணி அதிகாரி பி.முரளிகுமார் சிறப்பு செலவின பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி, மாநிலத்தின் பிற அதிகாரிகளுடன் தேர்தல் தொடர்பாக ஆலோசனைகளை மேற்கொள்வார். தேர்தலில் முறையற்ற வகையிலான பண பலத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அவர் கண்காணிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலி மருத்துவர்கள் கைது
விழுப்புரம், ஜூலை.17; விழுப்புரம் அருகே சூரப்பட்டு கிராமத்தில் மருந்து கடை நடத்தி வரும் 2 பேர் மருத்துவ படிப்பு படிக்காமலேயே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதாக மாவட்ட நலப் பணிகள் இணை இயக்குனர் சுகந்திக்கு புகார் வந்தது. இதையடுத்து சுகந்தி தலைமையில் அதிகாரிகள் சூரப்பட்டு கிராமத்திற்கு நேரில் சென்று மருந்துக் கடைகளை ஆய்வு செய்தனர். அப்போது அங்குள்ள ஒரு மருந்து கடையில், கோழிப்பண்ணை கிராமத்தைச் சேர்ந்த ஜெகன் என்பவரின் மனைவி டெல்பினா (39) என்பவர் டிப்ளமோ படித்துவிட்டு, மருத்துவம் பார்த்து வந்ததும், வீரமூர் கிராமத்தை சேர்ந்த சாமிக்கண்ணு மகன் சிவனேசன் என்பவர் பி.பார்ம் படித்துவிட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து இணை இயக்குனர் சுகந்தி கெடார் காவல் நிலையத்தில் டெல்பினா, சிவனேசன் மீது புகார் கொடுத்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
பள்ளி மாணவனை கடத்திய தந்தை, மகன் கைது
திருவண்ணாமலை, ஜுலை 17- திருவண்ணாமலை அருகே 1 லட்ச ரூபாய் பணம் கேட்டு பள்ளி மாணவனை கடத்திய தந்தை, மகனை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கலசபாக்கம் அடுத்த கிடாம்பாளையம் நேருநகர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி. பலராமன் (49). இவர் ஜவ்வாதுமலை கானமலை போங்கனூர் கிராமத்தை சேர்ந்த பூசி (எ) பெரியபையன் (40) என்பவரிடம் ரூ.1 லட்சம் கடனாக பெற்றுக்கொண்டு தனது நிலத்தை குத்தகைக்கு விட்டுள்ளார். குத்தகை காலம் முடிவடைந்ததால், தான் கொடுத்த ரூ.1 லட்சத்தை பலராமனிடம் திருப்பிக் கேட்டார். பலராமனால் பணம் கொடுக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பூசி, அவரது மகன் ஏழுமலை (24), உறவினர் கோபால் ஆகிய 3 பேரும் சேர்ந்து பலராமன் மகன் கோபாலகிருஷ்ணனை (12) ஜவ்வாதுமலைக்கு கடத்திச் சென்றுவிட்டனர். இதுகுறித்து பலராமன் கடலாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஜவ்வாதுமலை காவல் துறையினர் பூசி வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறுவனை மீட்டு பூசி, அவரது மகன் ஏழுமலை ஆகிய 2 பேரையும் பிடித்து கடலாடி காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து கடலாடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ஏழுமலை, பூசி இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநங்கை அடித்து கொலையா?
விழுப்புரம், ஜூலை 17- விழுப்புரம் செஞ்சி சாலையில் உள்ள அயினம்பாளையம் தனியார் பள்ளி அருகே ரத்தவெள்ளத்தில் தலையில் காயத்துடன் திருநங்கை இறந்து கிடந்ததைப் பார்த்த அந்த பகுதியினர் இதுகுறித்து விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் திருநங்கை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணையில் இறந்து கிடந்த திருநங்கை விழுப்புரம் அடுத்த அகரம் கிராமத்தில் வசிக்கும் அபிராமி (35) என்பதும், அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதும் தெரிய வந்தது. காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து யாராவது மர்ம நபர்கள் கொலை செய்தார்களா அல்லது திருநங்கைகளுக்குள் ஏற்பட்ட மோதலில் கொலை செய்யப்பட்டாரா என பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.