tamilnadu

img

என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை நிறுத்த அறிவிப்பு

கடலூர், செப். 10- என்எல்சி இந்தியா நிறுவன ஒப்பந்தத் தொழிலாளர் கூட்டமைப்பினர் பேரணியாகச் சென்று, என்எல்சி தலைமை அலுவலகத்தில் வேலைநிறுத்த அறிவிப்பு மனுவை வழங்கினர். கடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம், வீடு, நிலம் கொடுத்தவர்களை நிரந்தரப்படுத்த வேண்டும், பணி மூப்பு பட்டியலில் உள்ள  விடுபட்ட அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களையும் இண்கோசர்வ் சொசைட்டியில் இணைக்க வேண்டும், இஎஸ்ஐ, வீட்டு வாடகைப் படி உயர்வு, கிராஜூவிட்டி அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.  இந்த நிலையில், வேலைநிறுத்த அறிவிப்பு மனு அளிக்கும் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது. சிஐடியு-என்எல்சி இண்கோசர்வ், ஹவுசிகோஸ் ஒப்பந்த தொழிலாளர் ஊழியர் சங்கத்தினர்,  தொழிலாளர் வாழ்வுரிமை சங்கம், தொழிலாளர் விடுதலை முன்னணி சங்கத்தினர் நெய்வேலியில் வேலைநிறுத்த அறிவிப்பு மனு அளிக்கும் பேரணியை நடத்தினர். 

நெய்வேலி பெரியார் சிலை அருகே ஊர்வலம் தொடங்கியது. நெய்வேலி சிஐடியு தலைவர் ஏ.வேல்முருகன் தொடங்கி வைத்தார். தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சிந்தனைச்செல்வன், சிஐடியு மாநில துணை பொதுச் செயலாளர் வி.குமார், மாவட்டச் செயலாளர் பி.கருப்பையன் மற்றும் 1000-க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

நேரு சிலை அருகே பேரணியை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். பின்னர், காவல்துறையினர் தங்களது வாகனத்தில்  தலைவர் தி.வேல்முருகன் உள்ளிட்ட சிலரை மட்டும் ஏற்றிக் கொண்டு, என்எல்சி தலைமை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர்.ஆனால், மனு அளிக்க வந்தவர்களை தலைமை அலுவலக வாயிலில் பணியிலிருந்த சிஐஎஸ்எப் வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதையறிந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்எல்சி தலைமை அலுவலகம் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதையடுத்து, தலைமை அலுவலகத்துக்குள் சங்கங்களின் தலைவர்கள் சென்று, வேலைநிறுத்த அறிவிப்பு மனுவை என்எல்சி முதன்மை பொது மேலாளர் தியாகராஜனிடம் வழங்கினர். பின்னர் அவர்கள் கூறியதாவது:- மனு அளிக்க வந்தவர்களை அனுமதிக்காமல் நிர்வாகத்தினர் தடுத்தனர். பின்னர் மாவட்ட நிர்வாகம், காவல் துறை அதிகாரிகளிடம் பேசியதைத் தொடர்ந்து உள்ளே அனுமதித்தனர். அங்கு எங்களிடம் முதன்மை பொது மேலாளர் மனு வாங்கினார். ஒப்பந்தத் தொழிலாளர்களின் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காணாவிட்டால் அனைத்துக் கட்சி நிர்வாகிகளையும் ஒருங்கிணைத்து அடுத்தகட்ட போராட்டம் அறிவிக்கப்படும் என்றனர்.