வேலூர், ஆக. 20- வேலூரில் நடந்த அரசு விழாவில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மூன்று மாவட்டங்களின் திட்டப் பணிகளுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அடிக்கல் நாட்டினார். வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடந்த விழாவில், ஏற்கனவே முடிவுற்ற ரூ.50.51 கோடி மதிப்பிலான 13 திட்டப் பணிகள் மற்றும் ரூ.73.53 கோடி மதிப்பிலான 3 பணிகளையும் முதலமைச்சர் துவக்கி வைத்தார். இந்த விழாவில், 18,589 பேருக்கு பல்வேறு அரசுதுறைகளின் நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் எடப்பாடி வழங்கினார் . இதனை தொடர்ந்து விவசாய சங்க பிரதிநிதிகள், மகளிர் சுய உதவி குழுக்கள், தொழிலதிபர்கள் ஆகியோர்களுடன் கலந்தாய்வு நடத்தினார். பிறகு, மூன்று மாவட்ட அதிகாரிகளுடன் மாவட்டங்களின் வளர்ச்சித் திட்டபணிகள் மற்றும் கொரோனா தடுப்பு குறித்தும் ஆய்வுகளை மேற்கொண்டார். இதில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அ.சண்முக சுந்தரம், ச.திவ்ய தர்ஷினி, ம.ப.சிவனருள், அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நீலோபர் கபில் மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். முதலமைச்சர் பங்கேற்ற இந்த அரசு விழாவில், நலத்திட்ட உதவிகள் பெறும் பயனாளிகள் ஒரு சிலரை தவிர பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி,” தமிழகத்தில் கொரோனா இறப்பை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதால் மாநிலத்தில் தற்போது கொரோனா கட்டுபாட்டில் உள்ளது” என்றார்.
தென்பெண்ணை-பாலாறு
ரூ.648 கோடி மதிப்பிலான தென் பெண்ணை-பாலாறு இணைப்பு திட்டம் ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொன்னை ஆற்றின் குறுக்கே ரூ. 12.56 கோடி செலவில் தடுப்பனைகள் அமைக்கப் படும். பாலாற்றில் தடுப்பணைகள் கட்ட ஆய்வு மேற் கொள்ளப்பட்டு வருகிறது என்றும் முதலமைச்சர் கூறினார்.
பத்திரபல்லியில் அணை..
நீண்ட நாள் நிலுவையில் இருந்த விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று குடியாத்தம் பத்திரபல்லியில் அரசு ரூ.128 கோடி செலவில் அணைக்கட்ட திட்டமிட்டுள்ளது என்றும் வேலூரில் நேதாஜி காய்கறி சந்தைக்கு மாற்றாக 35 ஏக்கரில் வியாபாரிகள் சொந்தமாக வாங்கிய இடத்தில் அவர்களுக்கு கடைகள் கட்டிதரப்படும் எனவும் ராணிப்பேட்டையில் உள்ள குரோமியம் கழிவுகளை அகற்ற மத்திய அரசிடம் ரூ.600 கோடி நிதி கேட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.