ஹூஸ்டன்,அக்.4- தமிழ் மொழி பாரம்பரிய ஆய்வுக்காக அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்திற்கு, தமிழ் ஆய்வு இருக்கை அமைப்பு 14 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளது. இந்தியாவுக்கு வெளியே 30 இடங்களில் தமிழ் இருக்கைகள் உள்ளன. அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஹூஸ்டன் தமிழ் இருக்கை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக ஹூஸ்டன் தமிழ் இருக்கை அமைப்பு அமெரிக்காவில் உள்ள தமிழர்களால் 2018 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த அமைப்பினர், தமிழ் இருக்கை அமைப்பதற்கான நிதியை திரட்டி வருகின்றனர். தமிழ் மொழியை கற்பிப்பதற்கும், பண்டைய தமிழ் இலக்கியங்கள் மற்றும் தமிழ் பாரம்பரியம், பண்பாடு போன்றவற்றை ஆராயவும் தமிழ் இருக்கைகள் பெரிதும் உதவியாக உள்ளன. இந்நிலையில் ஹூஸ்டன் தமிழ் இருக்கை அமைப்பானது, 2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 14 கோடி) நிதி திரட்டி உள்ளது. அந்த நிதியை விரைவில் பல்கலைக் கழகத்திற்கு வழங்க உள்ளது. இது குறித்து ஹூஸ்டன் தமிழ் இருக்கை அமைப்பு இயக்குநர்கள் கூறுகையில், அமெரிக்காவில் 2 லட்சத்து 50 ஆயிரம் தமிழர்கள் வசித்து வருகின்றனர். எங்கள் குழந்தைகள் அனைவரும் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும்போது, உயர் நிலையில் உள்ள தமிழ் கலாச்சாரம், மொழி மற்றும் இலக்கியம் பற்றி அறிந்து கொள்வதற்கான முயற்சியை முன்னெடுப்பதில் ஹூஸ்டன் தமிழ் இருக்கை அமைப்பு பெருமிதம் கொள்கிறது என்று தெரிவித்தார்.