tamilnadu

img

விழுப்புரம்: பாஸ்தா சாப்பிட்ட இளம் பெண் திடீர் மரணம்!

விழுப்புரம் அருகே தனியார் உணவகத்தில் பாஸ்தா சாப்பிட்ட இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

விழுப்புரம் மாவட்டம் அன்னியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி பிரதிபா. இவர்கள் இருவரும் கடந்த மாதம்தான் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர்.  

இந்நிலையில் நேற்று நண்பர்களுடன் சுற்றுலா சென்றுவிட்டு விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உணவகம் ஒன்றில் ஒயிட் பாஸ்தா வாங்கி சாப்பிட்டு விட்டு வீட்டிற்குச் சென்றுள்ளனர்.  

வீட்டிற்குச் சென்ற சிறிது நேரத்திலேயே பிரதிபா வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது கணவர் உடனே முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு வந்துள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.    

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உடற்கூறு ஆய்விற்கு பிறகுதான் பாஸ்தா சாப்பிட்டதால் அந்த பெண் உயிரிழந்தாரா அல்லது வேறேதும் காரணம் உண்டா என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.  

மேலும் இறந்த பெண் இதய அடைப்பு பிரச்சனை காரணமாக மாத்திரை எடுத்துக்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  

ஷவர்மா, நூடுல்ஸ் சாப்பிட்டு உயிரிழந்தவர்களை அடுத்து தற்போது பாஸ்தா சாப்பிட்டு ஒருவர் உயிரிழந்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.