விழுப்புரத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பூபதி என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மேல் புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பூபதி(24). இவர் 2019 ஆம் ஆண்டு அதே பகுதியில் வசித்து வந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் இதை பற்றி யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் கூறியுள்ளார்.
ஆனால் இதுகுறித்து அந்த சிறுமி பெற்றோரிடம் கூறியதையடுத்து, அவலூர்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் அவலூர்பேட்டை போலீசார், பூபதி மீது வன்புணர்ச்சி, கொலை மிரட்டல் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து முடிவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் குற்றம் சாட்டப்பட்ட பூபதிக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ஒரு லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி முத்து குமாரவேலு தீர்ப்பளித்தார்.
மேலும் அபராதம் கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் கூறினார்.
அதனைதொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக 9 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிமன்ற உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.