tamilnadu

img

உயிர்காக்கும் மருந்துகளோடு பயணிக்கும் வெண்கொடித் தோழர்கள்

உலகை அச்சுறுத்தி கொண்டி ருக்கும் கொரோனா தொற்று நோயை தடுப்பதற்கு  தனிமனித இடைவெளியை உத்தரவாதப்படுத்த அதிகாரிகள் கடுமையான அறிவிப்பு களை கொடுத்து  கொண்டிருந்தபோதும், எதற்காக மக்கள் வீட்டை விட்டு வெளியே வருகிறார்கள் என்பதை பற்றி  தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் கூடிய சிறப்பு அதிகாரிகள் கவனிக்க தவறியதை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சரியாக மதிப்பீடு செய்து அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று அந்த பணிகளை நாமே செய்து  தனிமனித இடைவெளியை உத்ரவாதபடுத்தி அதிகாரிகளின் சுமைகளை குறைப்பது என்று களமிறங்கினோம். குறிப்பாக அரசு மருத்துவமனை களில் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், மனநோய் நெஞ்சுவலி போன்ற நோய்களுக்காக சிகிச்சை பெற்று வாழ்நாள் முழுவதும் மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு கொண்டிருக்கும் நோயாளிகளுக்கு அரசு மருத்துவர்களின் ஆலோசனை பெற்று அவர்களது வீட்டிற்கே சென்று வழங்குவது என்று முடிவு செய்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், தேனி மாவட்டத்தில் மட்டும் இதுவரை நூறுக்கும் மேற்பட்டோருக்கு  வீட்டிற்க்கே சென்று வழங்கியுள்ளோம்.

அரசு மருத்துவமனைகளில் மாதமாத்திரைகளை பெற்று கொடுப்பது என்று தொடங்கப்பட்ட பணிதான். மக்களிடம் இருந்து வந்த ஒவ்வொரு அழைப்பும் வேதனைக்குரிய விசயமாக இருந்தது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்னை, மதுரை, பாலக்காடு போன்ற நகரங்களில் சிகிச்சை பெற்று மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு  வந்த நோயாளிகள் அங்கு சென்று மருந்துகளை வாங்கமுடியாமல் சிரமப்படுவதாகவும் எப்படியாவது அதைப்பெற்றுத் தரவேண்டுமென்று கண்ணீருடன் பேசிய தொலைபேசி அழைப்புகள் கலங்கச் செய்தன.

தன்னார்வலர்களை ஒருங்கினைக்க தேனி மாவட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ள  சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் நிலைமை யை எடுத்து கூறி அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் எங்களுக்கான அடையாள அட்டைகளை வழங்க முன்வர வேண்டுமென்று கேட்டபோது உங்களை யார் அந்த பணிகளை செய்ய சொன்னது ?

நீங்கள் இல்லாததை கட்டமைத்து சொல்கிறீர்களா?

அவர்களுக்கு நாங்களே  மருந்து களை பெற்றுதருகிறோம் என்று சொன்ன அதிகாரிகளை நம்பி சம்ந்த பட்ட நோயாளிகளை தொடர்பு கொள்ள சொன்னோம். வசனம் பேசிச் சென்ற அதிகாரியிடமிருந்து மருந்து கிடைக்கவில்லை என்கிற தகவல் அறிந்து தனியாக ஐந்து பேர் கொண்ட குழு அமைத்து அந்தந்த மாவட்டத்தில் இருக்கும் வாலிபர் சங்கத் தோழர்களின் உதவிகளோடு சம்பந்தபட்ட மருத்துவமனைகள் மற்றும் மருந்து நிலையங்களுக்கு சென்று மருந்துகளை நேரடியாக வாங்கி, கடுமையான சிரமங்களுக்கு மத்தியில், செய்திதாள் மற்றும் காய்கறிகளை கொண்டுவரும் வாகனங்களை கண்டறிந்து அவர்களின் உதவிகளோடு  தேனிமாவட்ட காவல்துறை அதிகாரிகளான துணைகண்கானிப்பாளர் சின்னகண்ணு, ஆய்வாளர் திருமதி கீதா ஆய்வாளர் சிலைமணி போன்ற மனிதநேயமுள்ள அதிகாரிகளின்  உதவியோடு நோயாளிகளின வீட்டிற்க்கே சென்று வழங்கி வருகிறோம். இந்த மகத்தான பணியில் கண்ணன் போன்ற காவலர்களும் கூட பணிக்கு வருகின்ற பொழுது  மருந்துகளை பெற்று கொடுத்து உதவுகிறார்கள்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு இடுக்கி மாவட்டம் மூணாறில் இருந்து பெறப்பட்ட மருந்துகளை எடுத்துக் கொண்டு 100 கி.மீ. இருசக்கர வாகனத்தில் பயணித்து உரியநேரத்தில் கொண்டு போய் சேர்த்துதார்கள் தேனி மாவட்ட வாலிபர் சங்கத் தோழர்கள்.

கூடலூரில் 19 வயதில் இரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்ட அபிலாஸ் என்கிற இளைஞனுக்கு, மதுரை மீனாட்சி மருத்துவமனையில் இருந்து, பலசிரமங்களுக்கு மத்தியில்  பெறப்பட்ட மருந்துகளை உரிய நேரத்தில் கொண்டு சேர்த்தனர். இடுக்கி மாவட்டம் குமுளிக்கு அருகே இருக்கும் மாதவன்கானல் கிராமத்தில் தோட்ட தொழிலாளியாக பணியாற்றும் முருகன் என்பவருக்கு இதய சிகிச்சை சம்பந்தப்பட்ட  மருந்துகளை  குமுளி செக்போஸ்ட் வரை கொண்டு சென்று குமுளியை சார்ந்த   தோழர்களின் உதவியோடு அவரது வீட்டிற்க்கே கொண்டு சேர்த்தது, ஒரு நெகிழ்வான அனுபவம்.

கம்பம் நகரில் தமிழக மின்சார துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள சுமார் 80 வயது நிரம்பிய  ராஜேந்திரன் என்கிற முதியவருக்கும் மற்றும் அவரது மனைவிக்கும் வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் மதுரையில் இருந்து பெற்ற சர்க்கரை நோய் மாத்திரைகளை கொண்டு சேர்த்த அனுபவம் உணர்ச்சிகரமானது. தேனி மாவட்டத்தில் மட்டுமல்ல, மாநிலம் முழுவதும் இந்தபணிகளை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தேனி, கோவை,  கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் மாநில எல்லைகள் வரை பயணித்து மருந்துகளை பெற்றும் வழங்கியும் வருகிறோம்.

மேலும், தேனிமாவட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மூலமாக ஊரடங்கு நேரத்தில் உதிரம் கொடுத்து உயிர்காக்க கம்பம் அரசு மருத்துவமனையில் அனுதினமும் இரண்டுபேர் என்ற அடிப்படையில் 10 நாட்களாக இரத்ததானம் செய்து கொண்டிருப்பதோடு மாவட்ட முழுவதும் அவசரை தேவைக்கு குருதி கொடை வழங்கி வருகிறார்கள் இளம்வீரர்கள். அரசு மருத்துவமனைகளில் இருந்து பிரசவம் அடைந்த தாயையும் சேயையும் வீட்டிற்கு அனுப்பி வைக்க அரசு ஆம்புலன்ஸ்கள் முன்வராத போது தோழர்களின் ஆட்டோக்கள் மூலமாக அனுமதி பெற்று பத்திரமாக சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்த அனுபவம், பிறநோயாளிகளின் அவசர தேவைக்கும் நிரந்தரமாக ஆட்டோவை உத்தரவாதபடுத்தச் செய்து கொண்டிருக்கிறது.

திருநங்கைகள் மாற்றுத் திறனாளிகள், சுமைப்பணி தொழிலாளர்கள், ஆட்டோ தொழிலாளர்கள்  மற்றும் ஆதரவற்ற முதியோர்கள் என 100 பேருக்கு  அரிசி மற்றும் மளிகைப் பொருள்களை வழங்கி இருப்பதோடு கிருமிநாசினிகள், முகக்கவசங்கள், சேவைகட்டணம் இல்லாத மொபைல் ரீசார்ஜ்கள் என சுமார் ஒரு இலட்சம் ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பணிகளை நண்பர்களின் உதவிகளோடு வாலிபர் சங்கம் செய்துள்ளது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மட்டுமல்ல, பல தன்னார்வு அமைப்புகள், இளைஞர்கள் சாதி மதம் மொழி கடந்து மனிதத்தால் ஒன்றிணைந்து மகத்தான பணிகளை முன்னெடுத்துசெல்லும் பொழுது அவர்களை ஒருங்கினைக்க தமிழக அரசு முன்வராமல்  வேடிக்கை பார்ப்பதுதான் வேதனை.

கே.ஆர்.லெனின்

தேனி மாவட்ட தலைவர்
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்