tamilnadu

img

பிளவக்கல், சாஸ்தாகோவில் அணையிலிருந்து தண்ணீர் திறக்க விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்...

விருதுநகர்:
விருதுநகர் பிளவக்கல் மற்றும் சாஸ்தாகோவில் அணைகளிலிருந்து தண்ணீர் திறந்து விட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் 290 கண்மாய்கள், ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் 760 கண்மாய்கள் உள்ளன. கடந்த மாதம் முதல் தற்போதுவரை தென்மேற்குப் பருவ மழை பெய்துவருவதால், காரியாபட்டி, திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, இராஜபாளையம், தேவதானம் ஆகிய பகுதிகளில் நாற்று வளர்ம்க்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். பிளவக்கல் அணையிலிருந்து வெளியேறிய கசிவு நீர், மழை நீரால் வத்திராயிருப்பு பகுதியில் இரண்டு கண்மாய்களில் மட்டும் பாதியளவு தண்ணீா் நிரம்பியுள்ளது.

மீதமுள்ள 75 சதவீத கண்மாய்களில் தண்ணீர் இல்லை. நெல் நாற்று வளர்ந்து 35 நாட்கள் கடந்த நிலையில், வேறு வழியின்றி மோட்டார் பாசனம் மூலம் நாற்று நடவுப் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். அக்.20- ஆம்தேதிக்குப் பிறகு பெய்யும் வடகிழக்குப் பருவமழையை நம்பி விவசாயப் பணிகள் நடைபெற்றுவருகிறது. இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க விருதுநகர் மாவட்டச் செயலாளர் விஜயமுருகன் கூறியதாவது: தென்மேற்கு பருவ மழையை நம்பி விவசாயிகள் நாற்று வளர்க்கும் பணியில் ஈடுபட்டனர். இப்பருவ மழை கடந்த ஆண்டை விட கூடுதலாக பெய்திருந்தபோதும், கண்மாய்களில் தண்ணீர் தேங்கவில்லை. இதற்கு வரத்துக் கால்வாய்கள் முறையாக சீரமைக்கப்படாததே காரணம். நாற்று முதிா்ச்சி அடைவதற்கு முன்னர், வேறு வழியின்றி மோட்டார் பாசனம் மூலம் நெல் நடவுப்பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். பிளவக்கல், சாஸ்தா கோவில் அணைகளில் 20 அடிக்கு மேல்தண்ணீா் நிரம்பியுள்ளதால், அப்பகுதி விவசாயத்தைப் பாதுகாக்க அந்த அணைகளிலிருந்து தண்ணீா் திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.