விருதுநகர்:
இராஜபாளையத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான க.பெ.ரணசிங்கம் படத்தை உள்ளூர் கேபிள் டி.வியில் வெளியிட்டவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென படத்தின் இயக்குனர் கொடுத்த புகாரின் பேரில் இருவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விஜய் சேதுபதி நடிப்பில் க.பெ. ரணசிங்கம் திரைப்படம் எடுக்கப்பட்டு, ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டது. இந்நிலையில், இராஜபாளையம் பகுதியில் அத்திரைப்படம், உள்ளுர் கேபிள் டிவியில் ஒளிபரப்பானது. இத்தகவல் அறிந்த இயக்குநர் விருமாண்டி படத்தை வெளியிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், பீமராஜா சாலையில் உள்ள தனியார் பள்ளிக்கு சொந்தமான கேபிள் டிவியில் டவுன்லோடு செய்யப்பட்டு ஒளிபரப்பானது தெரிய வந்தது. மேலும் புகாரின் பேரில், போலீசார், கேபிள் டிவி பணியாளர்கள் மற்றும் பள்ளி தாளாளர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.