விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ளது உலக்குடி. இப்பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரதுமனைவி பஞ்சவர்ணம். மாரியப்பன் முடி திருத்தும் தொழில்செய்து வந்தார். அவர் இறந்து விட்ட நிலையில், அவரது மருமகன் ராஜா முடிதிருத்தும் வேலையை செய்து வந்தார். இந்த நிலையில், அங்கு புதிதாக கடை ஒன்றை பிடித்து அதில் சலூன் கடை அமைத்துள்ளார். அங்கு தலித்சமூகத்தைச் சேர்ந்த சிலர் முடி திருத்தம் செய்ய வந்துள்ளனர். அவர்களுக்கு முடி திருத்தம் செய்துள்ளார். இதை அறிந்த பிற சமூகத்தைச் சேர்ந்த சிலர் எங்களுக்கு மட்டுமே முடி திருத்த செய்ய வேண்டும் என்பது ஊர்க் கட்டுப்பாடு. ஏன் தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு முடி திருத்தம் செய்தீர்கள் என குற்றம்சாட்டியதோடு பஞ்சவர்ணம், ராஜா ஆகியோரின் குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்.மேலும், ஊருக்குள் உள்ள கடைகளில் இவர்களுக்கு எந்த பொருளும் தரக்கூடாது எனவும், தண்ணீரும் வழங்க கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளனர். இதனால் மனமுடைந்த பஞ்சவர்ணம் மற்றும் அவர்களது குடும்பத்தினர் விருதுநகர் மாவட்ட ஆட்சியர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாரளித்துள்ளனர்.