சார்பதிவாளர் அலுவலகம் இடமாற்றம்
திருவண்ணாமலை ஜூன் 16- திருவண்ணாமலை காந்தி நகரில் இயங்கி வந்த சார்பதிவாளர் அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை காந்தி நகர் 5ஆவது தெருவில் இயங்கி வந்த மாவட்ட பதிவாளர் பதிவுத் துறை அலுவலகம் மற்றும் எண்-1 இணை சார்பதிவாளர் அலுவலகம் தற்பொழுது 1/5, துர்க்கை அம்மன் கோவில் தெரு ஐசிஐசிஐ வங்கி கட்டடம் முதல் மாடி என்ற முகவரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் வேலை வாய்ப்பு
விழுப்புரம், ஜூன் 16- விழுப்புரம் மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள இரவுக் காவலாளி, துப்புரவுப் பணியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிபதி ஆனந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது, விழுப்புரம் மாவட்ட நீதித் துறையில் அடிப்படைப் பணிகளான இரவுக் காவலாளி 29, மசால்சி 11, பெருக்கு பவர் 7, துப்புரவுப் பணியாளர் 1 ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படவுள்ளன. இதற்கு எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடை பெறவுள்ளது. கல்வித் தகுதி, வயது வரம்பு, இன சுழற்சி விவரம், தேர்வு மற்றும் நேர்காணல் அழைப்பு உள்ளிட்ட விவரங்களை https://districts.ecourts.gov.in/viluppuram என்ற வலைதளத்தில் தெரிந்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை “முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், விழுப்புரம் 602605 என்ற முகவரிக்கு ஜூன் 20 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கலாம் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கிராம உதவியாளர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு
விழுப்புரம், ஜூன் 16- விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகாவில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து வட்டாட்சியர் ஆதிபகவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், செஞ்சி தாலுகாவில் அணையேரி, அஞ்சாஞ்சேரி, எடமலை, இல்லோடு, கடம்பூர், கல்லாலிப்பட்டு, கள்ளப்புளியூர், காரியமங்கலம், கொரவனந்தல், மணியம்பட்டு, மரூர், மேலத்திப்பாக்கம், மேல்கூடலுார், மேல்ஒலக்கூர், நெகனுார் ஆகிய கிராமங்களில் கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்களை வரும் 17ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை செஞ்சி தாலுகா அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சம்ர்ப்பிக்கலாம். இதற்கென ஒதுக்கீடு செய்துள்ள பட்டியல்படி தகுதியானவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 5ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2019 ஜனவரி 1ஆம் தேதி அன்று 21 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட வகுப்பினர், அருந்ததியர் மற்றும் பழங்குடியினர் 35 வயதுக்கு மிகாமலும், பிற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் மற்றும் முஸ்லிம்கள் 32 வயதுக்கு மிகாமலும், இதர வகுப்பினர் 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரருக்கு சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். பணி நியமனம் செய்யும் கிராமத்தில் குடியிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் கிராமத்தில் இருந்து 5 கி.மீ., துாரத்திற்குள் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பத்துடன் கல்விச்சான்று, ஜாதிச்சான்று, வருவாய்ச்சான்று, இருப்பிடச்சான்று, ரேஷன் கார்டு, வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு அட்டை ஆகியவற்றின் சான்றொப்பமிட்ட நகல்களை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். நேர்காணலின் போது அசல் சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும் என தெரி விக்கப்பட்டுள்ளது.