tamilnadu

காய்கறி வியாபாரம் குறைந்ததால் சுழற்சி முறையில் கடைகளை திறக்க வியாபாரிகள் முடிவு

விழுப்புரம், மே 28- விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் காய்கறிக் கடை களில் வியாபாரம் குறைந்து விட்டதால், சுழற்சி முறையில் கடைகள் திறக்கப்படும் என காய்கறி வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் காய்கறி சந்தை, பழைய பேருந்து நிலையம், அரசு மருத்துவ மனை எதிரில் உள்ள மைதானம் ஆகிய இடங்களில் மாற்றப்பட்டது. பொதுமுடக்கத்தில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து திண்டிவனம் நகர பகுதியில், காய்கறி கடைகள்,  பழக்கடைகளை தவிர மற்ற கடைகள் அனைத்தும் வழக்கம்  போல் செயல்படுகிறது. காய்கறி வியாபாரிகள் மீண்டும் நேரு வீதியில் உள்ள  சந்தையிலேயே கடைகளை திறக்க அனுமதிக்க  வேண்டும்  என நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் மாவட்ட நிர்வாகம் அதற்கு அனுமதி வழங்கவில்லை. காய்கறி சந்தையில் நடைபெற்ற வியாபாரம் இங்கு நடை பெறவில்லை. இதனால், கடைகளை சுழற்சி முறையில் திறப்பது என திண்டிவனம் காய்கறி வியாபாரிகள் சங்கத்தி னர் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கூறு கையில், காய்கறி சந்தை இடம் மாற்றப்பட்டதால் கடைகளில்  வியாபாரம் குறைந்து விட்டது. தற்போது அரசியல் கட்சிகள்  பொது மக்களுக்கு காய்கறி தொகுப்புகளை நிவாரணமாக வழங்கி வருவதாலும், பல இடங்களில் டாடா ஏஸ் வாகனத்தின்  மூலம் வீடு, வீடாகச் சென்று காய்கறிகள் விற்பனை செய்வதா லும் கடைகளில் வியாபாரம் குறைந்து விட்டது. இதனால் காய்கறி கடைகளை ஒரே சமயத்தில் திறக்காமல், சுழற்சி முறையில் திறப்பது என முடிவெடுத்துள்ளோம் என்றார்