மனித நாகரிகம் தோன்றி வளர்ந்த மிக முக்கிய களமாக தமிழகம் இருந்திருக்கிறது என்பதற்கான சான்றுகள் ஆதிச்சநல்லூர், கீழடி என இந்த நிலம் முழுவதும் விரவிக்கிடக்கிறது. அந்த வகையில் புதியதோர் களம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. அது, திருவில்லிப்புத்தூர்.விருதுநகர் மாவட்டம் திருவில்லிப்புத்தூர் தாலுகா விழுப்பனூர் கிராமம்.மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையின் மேல்புறம், மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ளது விழுப்பனூர் வருவாய் கிராமம். திருவில்லிப்புத்தூர் அருகே கிருஷ்ணன்கோவிலையொட்டி காவலர் துப்பாக்கிச் சுடும் பயிற்சி அளிக்கப்படும் இடத்திற்கு அருகே இந்தக் கிராமத்திற்கு உட்பட்ட எல்லையில் பழமையான முதுமக்கள் தாழிகள் நிறையப் புதைந்திருப்பது தெரியவந்தது. இப்பகுதியில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு குடியிருப்புகள் இருந்ததற்கான தடயங்கள் தெரிந்ததைத் தொடர்ந்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தினரின் முன் முயற்சியுடன் பேராசிரியர்கள் வரவழைக்கப்பட்டு இரண்டு நாட்கள் ஆய்வு நடத்தப்பட்டது.இராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான கந்தசாமி, ராஜூக்கள் கல்லூரி பேராசிரியர் திருப்பதி, சிவகங்கை அரசுக் கல்லூரி பேராசிரியர் தங்க முனியாண்டி, மதுரை தியாகராஜர் கல்லூரி பேராசிரியர் முத்துக்குமார் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.இப்பகுதியில் தொடர்ச்சியாக பல இடங்களில் முதுமக்கள் தாழிகள் புதைக்கப்பட்டு அவற்றின் மீது கற்பாறைகள் அடுக்கப்பட்டுள்ளன. மூன்றுவிதமான ஓடுகள் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. முதுமக்கள் தாழிகளின் ஓடுகள் சுமார் 2 அங்குலம் கனத்தில் செம்மண் மற்றும் கரிசல் மண் கலந்து இரண்டு அடுக்குகள் கொண்டதாக உள்ளன. ஒரு அங்குலம், இரண்டு அங்குலம் கனம் கொண்ட வண்ணம் தீட்டப்பட்டு, பூ வேலைப்பாடுகளுடன் மெருகேற்றப்பட்ட ஓடுகள் சிதறிக் கிடப்பதை காண முடிந்தது.
மேலும் இப்பகுதியில் கிடைத்த சில கற்கள் அதிக எடை கொண்டவையாக உள்ளன. அவை இரும்புத்தாது கலந்து சுட்ட மண்ணால் செய்யப்பட்டவை போல் உள்ளன. முதுமக்கள் தாழிகள் புதைக்கப்பட்ட இடத்தின் வடபுறம் கீழ்மேலாக சிற்றோடை செல்கிறது. அந்த சிற்றோடையின் வடகரை மிகப்பழமையான சுவரின் படிமம் தோற்றத்தில் உள்ளது. அது அங்கு கட்டுமானம் இருந்ததை உறுதி செய்கிறது. அதேபோல் சற்று வடக்கிலும் தேசிய நெடுஞ்சாலையின் கீழ்ப்புறத்திலும் முதுமக்கள் தாழிகள் புதைக்கப்பட்டதற்கான அடையாளங்கள் தெரிகின்றன.எனவே இந்தப் பகுதியில் விரிவான முறையில் அகழ்வாய்வு செய்வதன் மூலம் திருவில்லிப்புத்தூர் பிரதேசத்தில் வாழ்ந்த தமிழர்களின் தொல் நாகரிகத்தையும், பண்பாட்டையும் வெளிக்கொண்டுவர முடியும்.இந்த விபரங்களை உரிய ஆதாரங்களுடன் தமிழக தொல்லியல் துறையின் கவனத்திற்கு சமூக ஆர்வலர் க.துள்ளுக்குட்டி, தமுஎகச மாநிலத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன், மாவட்ட செயலாளர் கவிஞர் அ.லட்சுமி காந்தன், மாவட்ட நிர்வாகிகள் வழக்கறிஞர் பெ.ரவீந்திரன், க.சண்முகம், சு.நித்யானந்தம், கோ.ரவீந்திரநாத் மற்றும் முதன்மை ஆய்வில் ஈடுபட்ட பேராசிரியர்கள், சமூக ஆர்வலர்களும் கொண்டுசென்றனர்.இதையடுத்து, தொல்லியல் துறை ஆணையர் த.உதயச்சந்திரன் உத்தரவின்பேரில், விழுப்பனூர் ஊராட்சிக்குட்பட்ட கிருஷ்ணன்கோவில் அருகே உள்ள காவலர் துப்பாக்கிச்சுடும் பயிற்சி மையத்திற்கு வடக்கே உள்ள இடத்திலும், மம்சாபுரம் அருகே உள்ள குறவன்கோட்டை கண்மாயில் இருக்கும் முனியாண்டி கோவில் அருகிலும் தொல்லியல் துறையின் மண்டல உதவி பொறுப்பு இயக்குநர் சக்திவேல் மற்றும் விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த தொல்லியல் அலுவலர்கள், மண்டல அலுவலர் லோகநாதன் தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்விலும் மேற்கண்ட பல்வேறு ஆதாரங்கள் உறுதிசெய்யப்பட்டன.அப்போது அப்பகுதியில் கிடைத்த பானை ஓடுகளை ஆய்வு செய்த அவர்கள், இவை சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை என்று தெரிவித்தனர். எனவே இப்பகுதியில் விரிவான முறையில் அகழாய்வு செய்வது அவசியமாகிறது. உடனடியாக தொல்லியல் துறை உரிய முறையில் இதற்கான முடிவுகளை மேற்கொண்டு துரிதமாக செயல்பட வேண்டும் என தமுஎகச நிர்வாகிகளும் பேராசிரியர்களும் தொல்லியல் துறை அலுவலர்களிடம் வேண்டுகோள் விடுத்தனர்.அகழாய்வு நடக்குமா?இத்தகைய விபரங்கள் வெளியாகியுள்ள நிலையில், மேற்குறிப்பிட்ட இடத்தில் விரிவான முறையில் அகழாய்வு நடத்துவதற்கு தடையாக ஒரு பிரச்சனை எழுந்துள்ளது. அப்பகுதியில் திருவில்லிபுத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கான இடம் அடையாளம் காணப்பட்டு, மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் ஏற்கெனவே அடிக்கல் நாட்டியிருக்கிறார். ஆனால் அந்த இடத்தில் தமிழரின் தொல் நாகரிகம் புதைந்து கிடக்கிறது என்பதை தற்போதைய பூர்வாங்க ஆய்வுகள் மூலம் கண்டறிய முடிந்திருக்கிறது. இதை விரிவாக அகழாய்வு செய்யும் பட்சத்தில், கீழடி போன்று மிகப்பெரும் தமிழர் நாகரிக அடையாளங்கள் கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே இந்தக் குறிப்பிட்ட இடத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அமைப்பதற்கான திட்டத்தை கைவிட்டு அதற்கு வேறு இடத்தை தேர்வு செய்வது பொருத்தமாக இருக்கும். விழுப்பனூர் கிராமத்தில் கண்டறியப்பட்டுள்ள முதுமக்கள் தாழிகள் நிறைந்த இந்தப் பகுதியை தொல்லியல் துறை கையகப்படுத்தி விரிவான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்பதே விருதுநகர் மாவட்ட சமூக ஆர்வலர்கள் மற்றும் எழுத்தாளர்கள், பேராசிரியர்களின் விருப்பமாகும்.சு.நித்தியானந்தம்மாநிலக்குழு உறுப்பினர், தமுஎகச, திருவில்லிப்புத்தூர்