உளுந்தூர்பேட்டை. நவ, 19- ஆலைகளுக்கு அனுப்பிய கரும்புக்கான பாக்கித்தொகையை மாநில அரசு வட்டியுடன் பெற்றுத்தர வலியுறுத்தி சென்னையில் காத்திருப்பு போராட்டம் நடத்துவது என்று கரும்பு விவசாயிகள் சங்கம் முடிவு செய்திருக்கிறது. தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் விரிவடைந்த மாநிலக்குழு கூட்டம் விழுப்புரம் தெற்கு மாவட்டம் உளுந்தூர் பேட்டையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் “வேளாண் நெருக்கடிகளும் நாம் சொல்லும் மாற்றும்” என்ற தலைப்பில் பொருளாதார அறிஞர் பேராசிரியர் வெங்கடேஷ்ஆத்ரேயாவும், “அமைப்பை பலப்படுத்துவோம்” என்ற தலைப்பில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகமும் உரையாற்றினார். சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன் நடைபெற்ற பணிகள் தொடர்பான அறிக்கையையும், செயல் திட்டத்தை முன்மொழிந்தும், பொருளாளர் எம்.சின்னப்பா நிதிநிலை அறிக்கையை முன்மொழிந்தும் பேசினர். டிசம்பர் 20, 21 இல் நடைபெறும் கரும்பு விவசாயிகள் சங்கத்தின் அகில இந்திய மாநாட்டிற்கு தமிழ்நாட்டிலிருந்து 43 பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
தீர்மானங்கள்
தனியார் சர்க்கரை ஆலைகளான ராஜஸ்ரீ 75 கோடி, தரணி 100 கோடி, சக்தி 70 கோடி, அம்பிகா ஆரூரான் 78 கோடி என கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு எப்ஆர்பி விலையை பாக்கி வைத்துள்ளன. கரும்புக்கான பணத்தை 14 தினங்களுக்குள் விவசாயிகளுக்கு வழங்காவிட்டால் 1966 கரும்பு கட்டுப்பாட்டு சட்டத்தின்படி மேற்படி பாக்கித் தொகைகளுக்கு 15 விழுக்காடு வட்டி சேர்த்து தர வேண்டும். இந்த பாக்கித் தொகையை தமிழக அரசு வட்டியுடன் பெற்றுத்தர வேண்டும். இதனை வலியுறுத்தி சென்னையில் காலவரையற்ற காத்திருப்புப் போராட்டத்தை நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. தமிழகத்தில் கடந்த 2014 முதல் 17 வரை நான்கு ஆண்டு காலத்தில் ஏஸ்ஏபி தொகையாக 1217 கோடி ரூபாயும், கூட்டுறவு, பொதுத்துறை ஆலைகள் 209 கோடியும் என மொத்தம் 1426 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு தராமல் பாக்கி வைத்துள்ளன. இதனை மாநில அரசே ஆலை நிர்வாகங்களிடமிருந்து பெற்றுத்தர வலியுறுத்தி ஆலைவாரியாக போராட்டம் நடத்துவது, அம்பிகா மற்றும் ஆரூரான் தனியார் சர்க்கரை ஆலைகளை மாநில அரசே ஏற்று நடத்த வேண்டும், இந்த சர்க்கரை ஆலைகள் 5,000க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகளின் பெயரில் வங்கிகளில் வாங்கி இருக்கக்கூடிய 600 கோடி ரூபாய் கடனை ஆலையின் பெயரில் மாற்றி கரும்பு விவசாயிகளை கடனிலிருந்து விடுவிக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றினர். ஆந்திர மாநிலம் திருப்பதியில் நடைபெறும் கரும்பு விவசாயிகள் சங்கத்தின் அகில இந்திய மாநாட்டில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் பங்கேற்பது என தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் விரிவடைந்த மாநிலக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.