உளுந்தூர்பேட்டை, ஜூன் 19- விழுப்புரம் மாவட்டம் முழுவதும் கடும் வறட்சியின் காரணமாக குடிநீர் பிரச்சனை தலைவிரித்தாடும் நிலையில் உளுந்தூர்பேட்டை நகரில் பேரூராட்சி மூலம் வினியோகிக்கப்படும் குடிநீரில் கழிவுநீர் மற்றும் சுண்ணாம்பு கலந்து வருகிறது. உளுந்தூர்பேட்டை நகரில் கோடை காலம் என்றாலே கடும் தண்ணீர் பிரச்சனை தொடர்ந்து வருகிறது. அதுவும் கடந்த ஆண்டு பருவமழை ஏமாற்றிய நிலையில் இந்த ஆண்டு கோடை என்பது உளுந்தூர்பேட்டை நகரை பொருத்த அளவில் அங்கு வசிக்கும் மக்களுக்கு பெரும் சிரமத்தை அளித்தது. நகரில் உள்ள அனைத்து வார்டுகளிலும் 90 விழுக்காடு 7 முதல் 10 நாட்களுக்கு ஒருமுறையே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இப்படி வழங்கப்படும் குடிநீரும் பெரும்பாலும் சுண்ணாம்பு கலந்து வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு வியாதிகள் உருவாவ தும் அதிகரித்து வருவதாக பெண்கள் குற்றம் சுமத்துகின்றனர். கந்தசாமிபுரம் பகுதியில் முறை வைத்து வழங்கப்படும் குடிநீர் வினியோகத்தில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக கழிவுநீர் கலந்த குடிநீர் வருகிறது. இதேபோல புதுத் தெரு உள்ளிட்ட பல தெருக்களில் சுண்ணாம்பு கலந்த குடிநீர் மூன்று தினங்களுக்கு ஒருமுறை பேரூராட்சியால் வழங்கப்படுகிறது. அண்ணாநகர், பச்சையப்பாநகர், திருவெண்ணெய்நல்லூர் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடிநீர் மிகப்பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ள நிலையில் இதனைத் தீர்ப்பதற்கு பேரூராட்சி நிர்வாகம் பெரிய அளவிற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர். இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உளுந்தூர் பேட்டை நகரச் செயலாளர் கே தங்கராசு கூறும்போது,“35 லட்ச ரூபாய்க்கு மேல் செலவு செய்து 3 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை குடிநீர் தொட்டியை திறந்து குடிநீர் வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் பல கட்டப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் பேரூராட்சி நிர்வாகத்தால் பேச்சுவார்த்தையின்போது நடவடிக்கை எடுப்பதாக கூறப்படும் நிலையில் பிரச்சனை தீர்ந்தபாடில்லை. எனவே இன்று 20ஆம் தேதி உளுந்தூர்பேட்டையில் பேரூராட்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் குடிநீர் பிரச்சனையை போர்க்கால அடிப்படையில் தீர்க்கக் கோரி காலி குடங்களுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது” என்றார்.