விழுப்புரம், ஜூன் 1-விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 8 மாதங்களாக நடத்தப்படாமல் உள்ள மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக் கான சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி, மாநிலக் குழு உறுப்பினர் வி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-மாவட்ட ஆட்சியர் இரண்டு மாதத்திற்கு ஒரு முறையும், கோட்டாட்சியர் மாதத்திற்கு ஒரு முறையும் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் நடத்தி குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மாநில வருவாய்த் துறை ஆணையர் உத்தரவாகும். ஆனால் விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 8 மாதங்களாக மாவட்ட ஆட்சியர் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் நடத்தவில்லை.தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்துள்ள நிலையில், மாவட்ட ஆட்சியரும் வருவாய் கோட்டாட்சியரும் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் உடனடியாக நடத்த வேண்டும். மேலும், மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளை இனம் கண்டு 4 மணி நேர வேலை, ரூ.224 முழு தினக்கூலி என நூறு நாள் வேலையை வழங்கவேண்டும்.உதவித் தொகை கேட்டு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகளிடம் சம்மந்தப்பட்ட பிரிவு அதிகாரிகளுக்கு லஞ்சம் வாங்கிக் கொடுக்க இடைத் தரதர்களை பயன்படுத்தி வருகிறார்கள். அப்படி கொடுக்காதவர்களுக்கு உதவித் தொகை வழங்க காலதாமதபடுத்தி மாற்றுத்திறனாளிகளை அலைகழிக்கும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வட்டாட்சியர் அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள் மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒட்டவேண்டும், மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அத்துறையின் மூலம்வழங்கப்படும் உதவித் தொகை, மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, ஸ்கூட்டர், பேட்டரி சைக்கிள், மற்றும் கருவிகளை தாமதமின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவித்திருக்கிறார்கள்.