tamilnadu

ஆறுதல் கூற சென்ற கே.எஸ்.அழகிரி மீது வழக்குப் பதிவு

விழுப்புரம், மே 19- விழுப்புரம் மாவட்டம் சிறுமதுரையில் எரித்துக் கொலை செய்யப்பட்ட சிறுமி ஜெயஸ்ரீயின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்க வந்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மீது திருவெண்ணெய்நல்லூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகள் ஜெயஸ்ரீ முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர்கள் கலியபெருமாள், முருகன் ஆகியோரால் அண்மையில் எரித்துக் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மாநிலத்தையே அதிர்ச்சிக் குள்ளாக்கிய இந்தச் சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். மேலும் சிறுமியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கிவருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சிறுமியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி ரூ.50 ஆயிரம் வழங்கினார். இதற்கிடையே ஊரடங்கு தடையை மீறி, சிறுமதுரை கிராமத்திற்கு கூட்டமாக வந்ததாகவும், தொற்று நோய் பரப்பும் விதமாக செயல்பட்டதாகவும் கூறி கே.எஸ்.அழகிரி, மாவட்டச் செயலாளர் ஆர்.டி.வி. சீனுவாசகுமார் உள்ளிட்ட ஐந்து பேர் மீது திருவெண்ணெய்நல்லூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தேமுதிக பொருளாளர் பிரேமலதா, பாஜக தலைவர் முருகன் உள்ளிட்டோர் மீதும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

;