1927 - சீனாவின் நாங்க்கிங் (தற்போது நாஞ்சிங்) நகரிலிருந்த தங்கள் மக்களைப் பாது காப்பதற்காக, அமெரிக்க, இங்கிலாந்து கடற்படைகளின் கப்பல்கள், அந்நக ரின்மீது தாக்குதல் நடத்தின. யாங்சே நதியின் தென்பகுதியில் அமைந்திருந்த நாங்க்கிங், ஓர் ஒப்பந்தத் துறைமுகமாகும். வணிகத்திற்காக ஒப்பந்தத்தின் அடிப்படையில் அந்நியர்கள் வரவும், தங்கவும் அனுமதிக்கப்பட்டிருந்த சீனத் துறைமுகங்கள் ஒப்பந்தத் துறைமுகங்கள் என்று அழைக்கப்பட்டன. சிங் மரபின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட இந்த ஒப்பந்தங்கள், பாதுகாப்பு அடிப்படையி லும், பொருளாதார அடிப்படையிலும் சீனாவுக்கு நன்மை பயக்காதவையாக இருந்ததால், (பின்னாளில்) இவை சமமற்ற ஒப்பந்தங்கள் என்று குறிப்பிடப்படுகின்றன. 1911 (ஹ்ஸின்-ஹாய்) புரட்சிக்குப்பின், சிங் மரபின் ஆட்சி முடிவுக்கு வந்து, சீனக் குடியரசு உருவானது. அரசுத் தலைவராக குறுகிய காலமே இருந்த சன்-யாட்-சென், பேயாங் ராணுவத்தின் தலைவர் யுவான் ஷிகாயிடம் ஆட்சிப்பொறுப்பை ஒப்படைத்தார்.
சன்-யாட்-சென்னுடன் கொமிண்ட்டாங் கட்சியைத் தொடங்கியவரான சாங் ஜியாவோரென், 1912 தேர்தலில் வென்றாலும், ஷிகாயின் ஆட்களால் படுகொலை செய்யப்பட்டார். பேயாங் அரசு என்றழைக்கப்பட்ட இந்த ஆட்சியின்போது, அதிகாரம் அந்தந்தப் பகுதி படைத்தலைவர்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது. சியாங் கை-ஷேக்கின் கட்டுப்பாட்டிலிருந்த, கொமிண்ட்டானின் பிரிவான ‘தேசிய புரட்சிகர ராணுவம்’, பேயாங் அரசிடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றியதுடன், சிதறுண்டுகிடந்த சீனாவை ஒருங்கிணைப்பதற்காக, வடபகுதி படையெடுப்பு என்பதை நிகழ்த்தியது.
சோவியத் ஆதரவு (பொதுவுடைமை) நிலைப்பாடு கொண்ட சன்-யாட்-சென்னைப் பின்பற்றுபவராக, கொமிண்ட்டானின் தலைமையைக் கைப்பற்றிய சியாங் கை-ஷேக், இந்தப் படையெடுப்புவரை கம்யூனிஸ்ட்களைத் துணையாகப் பயன்படுத்திக்கொண்டு, பின்னர் அவ்வாண்டின் ஏப்ரல் 12இலேயே படுகொலை செய்தார் என்பது தனிக்கதை. அந்நியர்களால் தங்கள் நாடு பாதிக்கப்படுவதான உணர்வு ஏற்கெனவே எழுந்தி ருந்து, அந்நியப் பொருட்கள் புறக்கணிப்பு போன்ற இயக்கங்கள்கூட நடந்திருந்த நிலையில், அந்நியர்களின் குடியிருப்புகள் இப்படையெடுப்பில் குறிவைத்துத் தாக்கப்பட்டன. அந்நிய தூதர்கள் உட்பட தாக்கப்பட்ட நிலையில்தான் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க, இங்கிலாந்து போர்க்கப்பல்கள் தாக்குதல் நடத்தி, அவர்களை மீட்டனர். அந்நியர்களின் சொத்துகள் கொள்ளையிடப்பட்டன. படையிலிருந்த கம்யூனிஸ்ட்கள்தான் அந்நியர்களைத் தாக்கினார்கள் என்று பின்னாளில் கொமிண்ட்டாங் கூறியது தனிக்கதை!
- அறிவுக்கடல்