tamilnadu

img

ரயில்வே ஊழியர்கள் தேர்வில் சமமற்ற முறை குழப்பத்தை உருவாக்கி விபத்துகளுக்கு வழிவகுக்கும்

குழப்பத்தை உருவாக்கி விபத்துகளுக்கு வழிவகுக்கும்  

டிஆர்இயு எச்சரிக்கை

மன்னார்குடி, டிச.16- ஊழியர்கள் நியமனங்களில் மாநில சமநிலை இல்லாமல் அந்தந்த மாநிலங்களின் ரயில்வே நிர்வாகங்களில் குழப்பமும் விபத்து போன்ற அவசர காலங்களின் போது உதவிகள் பெறுவதிலும் தகவல் பரிமாறிக் கொள்வதிலும் கடும் பிரச்சனைகளை உருவாக்கும் எனவும், எனவே அந்தந்த மாநில மக்களுக்கு தேர்வுகளில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என டிஆர்இயு வலியுறுத்தியுள்ளது.  இது பற்றி சங்கத்தின் உதவி பொதுச் செயலாளர்  செய்தியாளர்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,  கடந்த 2015-16 நிதியாண்டு 53654 பேர், 2016-17 நிதியாண்டு 59053 பேர், 2017-18 நிதியாண்டு 52982 பேர் என மொத்தம் ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 689 ரயில்வே ஊழியர்கள் இந்த மூன்று நிதியாண்டுகளில் ரயில்வேயில் பணி ஓய்வு பெற்றார்கள். தற்போது  உயர் அதிகாரிகள் பிரிவில் 2017 பணியிடங்களும், சி மற்றும் டி பிரிவு ஊழியர்கள் பிரிவில் இரண்டு லட்சத்து 98 ஆயிரத்து 574 பணியிடங்களும் கடந்த 01.06.2019 நிலவரப்படி காலியாக உள்ளது.

இதில் அதிகாரிகள் பதவிகள் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் மூலம் நிரப்பப்படுகிறது. மீதமுள்ள பணியிடங்களில் இரண்டு லட்சத்து 94 ஆயிரத்து 420 பணியிடங்கள் நிரப்ப தேர்வாணையங்கள் வாயிலாக ரயில்வே நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதில் கடந்த 2015-16 நிதியாண்டு 297 அதிகாரிகள், 51808 கடைநிலை ஊழியர்கள், இதர பிரிவில் 27995 ஊழியர்கள் என மொத்தம் 80100 ஊழியர்களும், கடந்த 2016-17 நிதியாண்டு 325 அதிகாரிகள், 6731 கடைநிலை ஊழியர்கள், இதர பிரிவில் 19587 ஊழியர்கள் என மொத்தம் 26643 ஊழியர்களும், கடந்த 2017-18 நிதியாண்டு 364 அதிகாரிகள், 5632 கடைநிலை ஊழியர்கள், இதர பிரிவில் 19100 ஊழியர்கள் என மொத்தம்  25096 ஊழியர்களும் நியமனம் செய்யப்பட்டார்கள். மொத்தம் இந்த மூன்று நிதியாண்டுகளில் மட்டும் ரயில்வேயில் பணி நியமனம் ஆனவர்கள் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 839 பேர்.  கடந்த டிசம்பர் 11 ம் தேதி நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்தாகூர் கீழ் அவையில் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் அளித்த பதிலில், அனைத்து மண்டல  ரயில்வேக்கள் மற்றும் உற்பத்தி தொழிற்சாலைகளில் பல்வேறு ரயில்வே தேர்வு ஆணையங்கள் மூலம் கடந்த (2015-19 முடிய) ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தைச் சார்ந்த 1433 பேர் ரயில்வேயில் பணியமர்த்தப்பட்டார்கள் என தெரிவித்து இருக்கிறார். 

கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் ரயில்வே பணிக்கு தேர்வு செய்யப்பட்ட ஒரு லட்சத்து 31 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களில் 1433 பேர் மட்டுமே தமிழர்கள் என்பது தெரிய வந்திருக்கிறது. ஊழியர்கள் நியமனங்களில் மாநில சமநிலை இல்லாமல் போனால், விபத்து மற்றும் அவசர காலங்களில் மாநிலத்தின் நகர, கிராம, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சமூக அமைப்புகள் உதவிகள் பெறுவதில் மொழி புரிதல் இன்மை தாமதத்தை உருவாக்கும். ரயில் நிலையங்களில் சாமானிய கீழ்தட்டு மக்கள் தங்கள் சொந்த மாநிலங்களிலேயே தகவல் பெற மொழிப் பிரச்சனையை எதிர் கொள்ளுவார்கள். இது எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தும்.  ரயில்கள் இயக்குவதில் தகவல் பரிமாற்றங்கள் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. இதற்கான மொழி புரிதல் குழப்பங்களை தவிர்க்கும். ரயில்வே பணியாளர்கள் தேர்வில் அந்தந்த மாநில மக்களுக்கு முன்னுரிமை வழங்குவது அவசியம்.  இவ்வாறு டி.மனோகரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.