tamilnadu

img

நிபந்தனையின்றி வங்கிக்கடன் வழங்குக!

மத்திய அரசின் வெற்று அறிவிப்பு தொழில் நிறுவனங்களுக்கு பயன்தராது -  சிறு, குறு தொழில் நிறுவன கூட்டமைப்பு கடும் விமர்சனம்

கோயம்புத்தூர், மே 26 –   சிறு, குறு தொழில்கள் சந்திக்கிற நெருக்கடியை தீர்ப்பதற்கு வழிவகுக்காமல் தொழில் நிறு வனங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி கடன் என்கிற மத்திய அரசின் அறிவிப்பு எந்த வகையிலும் தொழில் நிறுவனங்களுக்கு உதவாது. நடைமுறை எதார்த்தத்தை புரிந்து கொண்டு உடனடியாக சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு  தலா 1 லட்சம் ரூபாய் நிவாரண தொகையாக வழங்க வேண்டும். எவ்வித நிபந்தனையுமின்றி வங்கிகள் கடன் வழங்க வேண்டும் என்பன  உள்ளிட்ட கோரிக்கைகளை கோவையை சேர்ந்த 19 தொழில்  அமைப்புகள் கூட்டாக கோரிக்கைவிடுத்துள்ளனர்.

கோவையை சேர்ந்த சிறு மற்றும் குறுந்தொழில் புரியும் 19 அமைப்புகளின் நிர்வாகிகள் கூட்டம் செவ்வாயன்று சிட்கோவில் உள்ள  கொசிமா அரங்கில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இக்கூட்டமைப்பின் சார்பில் தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் சங்கத்தின் (டேக்ட்) கோவை மாவட்ட தலைவர் ஜேம்ஸ், வார்ப்பட தொழில் முனைவோர் சங்க சிவசண்முகம் மற்றும் கொசிமா, கௌமா,  கொசிமாஃபேன்,  கொன்சியா,  டேக்மா,  கோஸ்மா உள்ளிட்ட 19 தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் சிறு, குறு தொழில் களை அடையாளப்படுத்துகின்ற வகையில் 19 தொழில் சங்கங்கள் இணைந்து கூட்டமைப்பாக  உருவாகியுள்ளோம். பொதுவாக அரசு அறி விக்கிற திட்டங்களை வரவேற்கிற அமைப்பாக இல்லாமல் எதார்த்தங்களை விமர்சனத்தோடு முன்வைக்கவே இந்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

கடன் வழங்க வங்கிகளுக்கு  வழிகாட்டல் இல்லை

மத்திய அரசால் சிறு, குறு தொழில்களுக்கு ரூ.3 லட்சம் கோடி கடன் வழங்கப்படும் என்ற  அறிவிப்பு மிகவும் பொத்தாம் பொதுவாக உள்ளது.  எதன் அடிப்படையில் அதனை வழங்க உள்ளார்கள் என்பது தெரியவில்லை. வங்கிகளுக்கே இதுவரை இந்த  வழிகாட்டுதல்கள் கொடுக்கப்படவில்லை. கடன் கேட்டு செல்கிற தொழில்முனைவோர்கள் தினமும் வங்கிக்கு சென்று வெறும் கையோடு திரும்புகிற நிலைதான் உள்ளது. சுமார் 63 நாட்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. மத்திய, மாநில அரசுகள் சில தளர்வுகளை தந்தாலும் தொழிற்கூடங்கள் முழுமையாக செயல்பட வில்லை. இப்போதும் ஸ்தம்பித்துள்ள நிலைதான்  உள்ளது.

தென் இந்தியாவின் மான்செஸ்டர் என சொல்லக்கூடிய கோவையில் 1.5 லட்சம் தொழிற்கூடங்கள் உள்ளன. இதில் 40 சதவீதம் வடமாநில தொழிலாளர்கள். 50 சதவீதம் தென் மாவட்ட தொழிலாளர்கள். மீதம் உள்ள 10 சதவீதம் கோவை மண்டலத்தை சார்ந்தவர்கள். அதன் படி சுமார் 2 லட்சம் வடமாநில தொழிலாளர்கள் கோவையில் பணிபுரிந்து வருகின்றனர். கொரோனாவால் ஏற்பட்ட அச்சம் காரணமாக  பல ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் இடம்பெயர்ந்து செல்கின்றனர். தற்போது இங்கு உள்ள வடமாநில தொழிலாளர்களும் பணியாற்றும் எண்ணத்தில் இல்லை. அவர்களும் ஊருக்கு செல்லும் முனைப்பிலேயே உள்ளனர். இத்தொழில் நிறுவனங்களுக்கு எதிர்காலத்தில் தொழில் நடத்துவதற்கு போதிய தொழிலாளர்கள் இல்லாமல் பெரும் நெருக்கடி ஏற்படும் ஆபத்து உள்ளது.

கொரோனா அச்சுறுத்தலுக்கு முன்பாகவே  பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி போன்ற வற்றால் தொழில்கள் பாதிக்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து  ஸ்லோ டவுன் என பிரச்சனை  வந்தது. இதற்கு பல காரணங்கள் சொல்லப் பட்டாலும் ஜி.எஸ்.டி யால் ஏற்பட்ட நெருக்கடி இதற்கு முக்கிய காரணம். தற்போது கொரோனா அச்சுறுத்தல் என்று  கைகள் அனைத்தும் கட்டப்பட்ட நிலையில் தொழில்கள் முடக்கப் பட்டுள்ளன. மத்திய அரசு அறிவித்துள்ள ரூ.3 லட்சம் கோடி கடன் சிறு, குறு தொழில்களுக்கு மட்டு மல்லாது, வர்த்தகத்தை சார்ந்தவர்களுக்கும் வழங்கப்படும் என சொல்லப்படுகிறது. வர்த்தக ரீதியாக பெரிய நிறுவனங்களை சார்ந்த சுமார் 7 கோடி பேர் இந்த கடன்களை வாங்க தயாராக உள்ளனர். இதனால் சிறு,குறு தொழில்களுக்கு எந்த நன்மையும் இல்லை.  ஒரு வாரம் காலம் கடந்துவிட்ட சூழ்நிலையில் தற்போது வரை எந்த வங்கிகளும் கடன் கொடுப்பது சம்பந்தமாக எதுவும் அறிவிப்பு வரவில்லை என்கின்றனர். 

ஜிஎஸ்டி வரியை குறைத்திடுக!

அதே போல் பேலன்ஸ் சீட், ஆண்டு வருமானம் உள்ளிட்டவற்றை வைத்து அதன் அடிப்படையில் 20 சதவீதம் கடன் வழங்கப்படும் என்கிறார்கள். இதனால் ஒரு சில நிறுவனங்களை தவிர, யாருக்கும் கடன் கிடைக்காது. வெட் கிரைண்டர், மூலப்பொருட்களை உருவாக் கின்ற பவுண்டரிகள் என 30 ஆயிரம் தொழிற் சாலைகளில் வட்டிக்கு வாங்கியும்,  தனியார் நிதி நிறுவனங்களில் கடன் பெற்றுத்தான் தொழில் நடத்துகிறார்கள். இதனால் அவர்களால் பேலன்ஸ் சீட், ஆண்டு வருமானம் உள்ளிட்ட வங்கிகள் கேட்கின்ற ஆவணங்கள் எதுவும் தர முடியாது. ஒன்னுமே இல்லாத தொழில்முனைவோர்களுக்கு எப்படி தர போகிறார்கள். இந்த கடன் திட்டம் பொத்தாம் பொதுவாக வெளியிடப்பட்ட ஒரு அறி விப்பு. கடன் திட்டங்களை எந்த ஒரு ஆவணங்களும் இல்லாமல், நிபந்தனைகளும் இல்லாமல் வழங்க வேண்டும். 

சிறு, குறு தொழில்கள்தான் இந்தியாவில் 90 சதவீதம் வேலை வாய்ப்பு அளிக்கின்றன. ஆகவே ரூ 3 லட்சம் கோடி கடன் திட்டம் சிறு,குறு தொழில்களுக்கு மட்டுமே தர வேண்டும். ஜி.எஸ்.டி வரி, அதற்கு முன்னால் வாட் வரி இருந்தது. இதில் சிறு, குறு தொழில்களுக்கு 5 சதவீதமாக இருந்தது. தற்போது உள்ள ஜி.எஸ்.டி வரி என்பது  பெருநிறுவனங்களுக்கும், எங்களுக்கும் ஒரே மாதிரி, இதனை ஏற்றுக்கொள்ளவே முடியாது. சிறுகுறு தொழில்களுக்கு ஜிஎஸ்டி 5 சதவீதம் என்பதை நிர்ணயிக்க வேண்டும். சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிடம் ஜாப் ஆர்டர் பெற்று தொழில் செய்து வருகிறார்கள். அரசின் பொதுத்துறை நிறு வனங்கள் ஜாப் ஆர்டர் முடிந்தும் 100 நாட்கள் வரை எங்களுக்கு பணம் செலுத்த நாட்களை எடுத்து  கொள்கிறார்கள். ஆகவே, தனியார் நிறுவனம், பொதுத்துறை நிறுவனங்கள் உடனடியாக எங்களுக்கு தர வேண்டிய நிலுவை தொகையை அரசு விதிகளின் படி 45 நாட்களில் தர வேண்டும். அரசே அதன் விதிகளை மதிக்கவில்லை என்றால் தனியார் நிறுவனங்கள் எப்படி மதிக்கும்.

தேவை உடனடி நிவாரணம்

பெரும்பாலான சிறு, குறுந் தொழில் நிறு வனங்கள் வாடகை கட்டிடத்தில் தான் உள்ளன. தொடர்ச்சியான ஊரடங்கு காரணமாக தொழில்கள் முடங்கிய சூழ்நிலையிலும் வாடகை கேட்கிறார்கள். இதை தருவதற்கு கூட எங்களி டம் பணம் இல்லை. எதிர்கால கடன் திட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது தான். அதை  கொரோனா பெயரில் 3 லட்சம் கோடி கடன் திட்டம் என அறிவித்துள்ளார்கள். இதனால் சிறுகுறுந்தொழில்களுக்கு இப்போது எந்த பயனும் இல்லை. எங்களுக்கு இப்பொழுது உடனடி யாக நிவாரணம் தேவை. எனவே, ஒவ்வொரு நிறு வனங்களுக்கும் ரூ. 1 லட்சம் நிவாரணமாக வழங்க வேண்டும். தமிழகத்தில் 10 லட்சம் சிறு குறு தொழில் முனைவோர்கள் உள்ளனர். அனை வருக்கும் இந்த நிவாரணம் தேவைப்படுகிறது. மக்கள் வாங்கும் சக்தியை இழந்துவிட்டார்கள். பம்புசெட் உற்பத்தியில் கொரோனாவால் ஆயி ரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். பல தொழில்கள் மூடுவிழா நோக்கி சென்று விட்டது. அதே போல் தொழில்  நிறுவனங்களுக்கு வரவு செலவு கணக்கு பார்க்கா மல் ரூ.10 லட்சம் கடன் வழங்க வேண்டும். அரசாங்கத்திற்கு எங்களை பாதுகாக்க வேண்டிய கடமை உள்ளது. வங்கிகளில் வழங்கப்படும் கடன்களுக்கு 6 சதவீதம் மட்டுமே வட்டி பெற வேண்டும். மூன்று வருடங்களாக நாங்கள் கட்டிய ஜி.எஸ்.டி அபராத தொகையை உடனடி யாக திருப்பி தர வேண்டும்.  ரிசர்வ் வங்கி  இ.எம்.ஐ.களுக்கு மூன்று மாத கால அவகாசம் அறிவித்தது. இதனை பல வங்கிகளில் பின்பற்றவே இல்லை. மீண்டும் மூன்று மாதம் காலம் அறிவிப்பு போதுமானது இல்லை. குறைந்தது ஒரு வருடம் காலம் அனைவருக்கும், அனைத்துத் துறைகளுக்குமே கால அவகாசம் வழங்க வேண்டும். வட்டி விகிதத்தை இந்த கால அவ காச காலத்தில் வசூலிக்கக்கூடாது. 

மின்கட்டணங்களை ரத்து செய்க!

பெரிய தொழில்நிறுவனங்களை மட்டுமே அரசு கலந்து ஆலோசித்து வந்து அறிவித்துள் ளது. சிறு குறு தொழில்நிறுவன சங்கங்களை அரசு ஆலோசிக்கவே இல்லை. பிற மாநில அரசுகள் மின் கட்டணங்களை ரத்து செய்ததைப்போல்  தமிழக அரசு 3 மாதம் காலம் வரை மின் கட்டணங் களை ரத்து செய்ய வேண்டும். கொரோனா பாதிப் பால் தினமும் 800 பேர் வரை பாதிக்கப்பட்டு வரு கிறார்கள். இந்த சூழ்நிலையிலும் தளர்வுகள் கொடுக்கப்பட்டு, விமான போக்குவரத்தும் துவங்கி விட்டார்கள். ஆனால் தென் மாவட்டங்களை சேர்ந்த எங்கள் தொழிலாளர்கள், மாவட்டம் விட்டு மாவட்டம் வருவதற்கு இ-பாஸ் நடமுறையில் உள்ளது. இதனால் அவர்களால் வர முடிய வில்லை. ஊரடங்கை அமல்படுத்தினால் முழுமை யாக அமல்படுத்துகள், இல்லையென்றால் மொத்தமாக தளர்வுகள் கொடுக்க வேண்டும். தென் மாவட்ட தொழிலாளர்கள் வருவதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் வருவதற்கு அனைத்து வழிவகைகளையும் செய்ய வேண்டும். 

எம்.ஒ.டி பெற்று தான் கடன் வாங்கிக் கொண்டிருக்கிறோம். இந்த காலகட்டத்திலும் எம்.ஒ.டி பெற்று தான், கடன் வாங்க வேண்டும் என்றால் ரூ.1 லட்சம் கடன் வாங்க ரூ. 30 ஆயிரம்  செலவு செய்ய வேண்டும். இந்த கட்டணங்களை அரசு முழுமையாக ரத்து செய்ய வேண்டும். எங்கள் கோரிக்கைகளை ஏற்று மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றவில்லை என்றால் தொழில் நிறுவனங்கள் மிகப்பெரிய இழப்பை சந்திக்கும் என தெரிவித்தனர்.

         (ந.நி.)