‘எனக்கு மூச்சுத் திணறுகிறது’ என்று அமெரிக்காவின் மின்னபொலிஸ் நகரில், வெள்ளை போலீஸ் அதிகாரியின் முழங்காலால் நசுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கறுப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்ட்டின் மரணத்திற்கு நீதி கேட்டு அமெரிக்கா முழுவதும் எழுச்சிமிகு போராட்டங்கள் வெடித்துக் கிளம்பியுள்ளன. இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக உலகெங்கிலும் இடதுசாரி, முற்போக்கு, ஜனநாயக இயக்கங்கள் ஆதரவு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. முதலாளித்துவ கொடூரங்களால் உலக உழைப்பாளி மக்களின் மூச்சுத் திணறுகிறது; அதிலிருந்து விடுதலை பெற முதலாளித்துவத்தை தூக்கி யெறிவோம் என்ற முழக்கத்துடன் பற்றிப் பரவியுள்ள இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. மதுரை மாநகரில் சங்கத்தின் அரசரடி, மேலப்பொன்னகரம் பகுதிகுழு செயலாளர்கள் செந்தில், நவீன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இயக்கத்தில் மாநிலச் செயலாளர் எஸ்.பாலா, மாவட்டத் தலைவர் பி. கோபிநாத், செயலாளர் டி. செல்வராஜ், பொருளாளர் ஜெ. பார்த்தசாரதி, பகுதி குழு தலைவர்கள் ஸ்டீபன், ஆசாத், துணைத் தலைவர் அப்துல்லா, பொருளாளர் சிந்து மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.